ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இந்த ஆண்டு மே 21-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28-ஆம் தேதி (நேற்று) வரை 8 நாட்கள் நடைபெற்றது. ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி ஆண்டுதோறும் தமிழக தோட்டக்கலை துறை சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 46-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சியினை கடந்த 21 ஆம் தேதி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வேளாந்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு 46-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சியினை தொடங்கி வைத்தனர்.


இக்கோடை விழாவில் குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் என அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிரேகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீம் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் கார்னேஷன், ஜெர்பரா, ஆந்தூரியம், ஆர்க்கிட் உள்ளிட்ட 5 இலட்சம் அரிய வண்ண மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. மேலும், பார்வையாளர்களின் கண்களை கவரும் வகையில் டாலியா, மேரி கோல்ட், ஜீனியா, டோரினியம், சால்வியா உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் வண்ண மலர்களை கொண்ட 10 ஆயிரம் மலர் தொட்டிகள் இம்மலர்க்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.



மேலும், மலர் கண்காட்சியில் மலைப்பகுதிகளில் விளையக்கூடிய பல்வேறு பழங்களைக் கொண்டு பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகளும் அமைக்கப்பட்டிருந்தது. அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்து தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடத்தப்பட்டது. மலர்க்கட்காட்சி நடைபெறும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலை ஏற்றம் (டிரக்கிங்), கைப்பந்து போட்டிகள், கயிறு இழுத்தல் போட்டிகள், மராத்தான், சைக்கிளிங், சிலம்பம், படகு போட்டி, கிரிக்கெட் போட்டிகள். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள் கண்காட்சி மற்றும் சுற்றுலாத்துறை, கலைப்பண்பாட்டுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நாள்தோறும் பல்வேறு இன்னிசை, கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு 46 வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சியினை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டுகளித்ததாக சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கலந்து கொண்டு மலர் கண்காட்சிக்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற அறிவிப்பின்படி ஏற்காடு ஏரியில் வண்ண விளக்குடன் கூடிய நீர்வீழ்ச்சியும் வைக்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஏற்காடு மலர்கண்காட்சி மற்றும் கோடை விழா நிலையில் கடந்த 21 ஆம் தேதி முதல் 8 நாட்களுக்கு சேலம் கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதை ஏறுவதற்கு மட்டும் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது. இருசக்கர வாகனம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக வாகனங்கள் சேலம் கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையை இருவழி பாதுகாக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் ஏற்காட்டில் இருந்து குப்பனூர் வழியாக இறங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஏற்காடு கோடை விழா முடிவடைந்த நிலையில் இந்தப் பாதைகள் இருவழி பாதையாக மாற்றப்பட்டு இன்று முதல் இயல்பாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளது.