ஏற்காட்டில் 47- வது கோடை விழா மற்றும் மலர் காட்சி கோலகலமாக தொடங்கியது. 


வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர்  அபூர்வா,தோட்டக்கலை மழைப்பயிர்கள் துறை இயக்குனர் பெ.குமரவேல் பாண்டியன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தாதேவி ஆகியோர் கோடை விழா மற்றும் மலர் காட்சி தொடங்கி வைத்தனர்.




மலர் கண்காட்சி தொடக்கம்


மலர் கண்காட்சியை ஒட்டி அண்ணா பூங்காவில் காற்றாலை வடிவிலான மலர் அலங்கார வடிவமைப்பு கடல்வாழ் உயிரினங்களான டால்பின்,  மீன்,  முத்துச்சிப்பி, ஆக்டோபஸ் என பல்லாயிரக்கணக்கான வண்ண மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட மலர் அலங்காரங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.


ஏற்காடு மலர்கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.


சிறப்பு பேருந்துகள்:


ஏற்காடு கோடை விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் மண்டலம் சார்பில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கோடை விழா நடைபெறும் நாட்களான 22.05.2024 (இன்று) முதல் 26.05.2024 வரை, காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேக்கேஜ் பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை காட்சி முனை, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் தோட்டம் ஆகிய 11 இடங்களை கண்டு கழித்து மீண்டும் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாலை 7.00 மணிக்கு பேக்கேஜ் நிறைவு செய்யும் வகையில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்துக்கு ஒரு பயணிக்கு ரூ.300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 




மேலும் பயணிகளின் வசதிக்காக பேக்கேஜ் பயணத்திற்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையதளம் (www.tnstc.in) மற்றும் App (tnstc bus ticket booking app) வழியாகவும் முன்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இந்த சிறப்பு பேருந்து வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


இன்று தொடங்கும் கோடை விழா மலர் கண்காட்சி வரும் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.


முதல் நாளான இன்று படகு இல்லம் அமைந்துள்ள ஏற்காடு ஏரியில் சுற்றுலாப் பயணிகளுக்கான படகு போட்டி  நடைபெற உள்ளது.