சேலம் மாவட்டம் ஏற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5 மணி அளவில் தனியார் பேருந்து எழுவது பயணிகளுடன் சேலம் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை சேலத்தைச் சேர்ந்த மணி என்பவர் இயக்கி வந்தார். ஏற்காட்டில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து மாலை 5:40 மணிக்கு மலைப்பாதையில் இறங்கிக் கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 13 வது கொண்டை ஊசி வளைவில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பனிரெண்டாவது கொண்டை ஊசி வளைவு தாண்டி, பதினோராவது கொண்டை ஊசி வளைவின் அருகில் விபத்துக்குள்ளானது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு குழுவினர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.



5 பேர் பலி:


இந்த விபத்தில் முனீஸ்வரன் என்ற 11 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிக காயங்களுடன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட சந்தோஷ் பிரபாகரன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணித்து விபத்துக்குள்ளான 65 பேர் உடனடியாக மலைப்பாதையில் வந்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் கார், வேன்கள் மூலமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். 


விபத்திற்கான காரணம்:


இந்த நிலையில் விபத்துக்குள்ளான பேருந்தை சேலம் சரக போக்குவரத்து துறை துணை ஆணையர் பிரபாகரன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பேருந்தின் ஸ்டியரிங், பிரேக், கியர் ராடு என அனைத்தும் நல்ல முறையில் உள்ளதாகவும், ஓட்டுநரின் கவனக்குறைவால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்களை தடுக்க வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும் என்ற அதிகாரிகள், ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் ஏறும் கியரிலேயே இறங்கினால் விபத்தை தவிர்க்கலாம் என்று அறிவுறுத்தினர்.


 


வழக்கு பதிவு:


ஓட்டுனர் மணி படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து ஏற்காடு காவல்நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பேருந்து ஓட்டுனர் மணியின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு அவர் மீது ஏற்காடு போலீசார் அதிவேகமாக பேருந்தை ஓட்டியது, அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓட்டுனர் மணி குணமானதும் அவரை கைது செய்யவும் ஏற்காடு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.


கூடுதல் பேருந்து தேவை:


சேலத்தில் இருந்து பல்வேறு தொழிலாளிகள் தினம் தோறும் காலையில் ஏற்காடு சென்று மாலை வீடு திரும்புவது வழக்கம். கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பேருந்து பயணம் செய்கின்றனர். வேறு வழியின்றி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறிப்பிட்ட அளவைவிட பயணிகளை அதிகமாக ஏற்றி செல்கின்றனர் என பொதுமக்கள் குற்றம் சாற்றுகின்றனர்.