உசிலம்பட்டி அருகே மாணவர் விடுதியில் உணவருந்திய 15 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பரபரப்பு - 15 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விடுதி மாணவர்களுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது எம்.கல்லுப்பட்டி. இங்கு செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளியில் இங்கே ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு அருகிலேயே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு மாணவர் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் 15 மாணவர்கள் தங்கியுள்ள சூழலில், இன்று காலை உணவாக இட்லி சாப்பிட்ட 15 மாணவர்களுக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
 
இட்லி தான் காரணமா
 
இதையடுத்து மாணவர்கள் அனைவரையும் அருகில் உள்ள எழுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்ற நிலையில் அனைவருக்கும் மருத்து குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அறிந்து உசிலம்பட்டி கோட்டாச்சியர் சண்முக வடிவேல் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்களும், மதுரை மாவட்ட மருத்துவ அலுவலர் குமரகுருபரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
நயினார் நாகேந்திரன் கண்டனம்
 
இந்நிலையில் இது குறித்து பா.ஜ.க., மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்..,” மதுரை, உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி அரசு மாணவர் விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சமூகநீதி விடுதிகள் என பெயர்மாற்றம் செய்து மூன்று நாட்களுக்குள்ளேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது @arivalayam ஆட்சி வெறும் விளம்பர மாடல் ஆட்சி என்று தெள்ளத்தெளிவாக உணர்த்திவிட்டது. எனவே, இனியும் எத்தனை பெயர்சூட்டு விழாக்கள் நடத்தினாலும், மேடைகளில் முழங்கினாலும் மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளாத திமுக அரசை இன்னும் சில மாதங்களில் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக தூக்கியெறிவர் என்பது திண்ணம்!” - எனவும் தனது எக்ஸ் தல பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.