உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எச்ஐவி தொற்று இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி வாசிக்க சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் மனித சங்கிலி நிகழ்ச்சியும், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை வழியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. மேலும் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சேலம் மாநகரப் பகுதிகளில் உள்ள ஆட்டோக்களில் எய்ட்ஸ் நோயின் ஆபத்து பற்றிய வாசகங்கள் பொருத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. 



சேலம் மாவட்டத்தில் நம்பிக்கை மையங்கள் மூலம் டிசம்பர் 2021 முதல் அக்டோபர் 2022 வரை 1,70,606 நபர்கள் எச்.ஐ.வி பரிசோதனையும், ஆலோசனையும் பெற்றுள்ளார்கள். இவர்களில் 477 நபர்களுக்கு புதியதாக எச்.ஐ.வி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 63,292 கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்.ஐ.வி / எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் மொத்தமாக 70 எச்.ஐ.வி கர்ப்பிணி பெண்கள் தாய்-சேய் மேவா திட்டம் மூலமாக புதிய கூட்டு மருந்துச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு தொற்றில்லாத குழந்தை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 9,674 நபர்கள் இலவச கூட்டு மருந்து சிகிச்சை எடுத்து வருகிறார்கள். 2011 ஆம் ஆண்டு முதல் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகள் மூலம் 422 மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி பெற்றுத்தரப்பட்டது. சேலம் மாவட்டத்தில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள 228 குழந்தைகளுக்கு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் வாயிலாக ஏற்படுத்தப்பட்டுள்ள அறக்கட்டளை வாயிலாக கல்விக்கான உதவித்தொகை ரூ.8,49,000 பெற்றுதரப்பட்டது.



மேலும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை என 1,402 நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உலக எய்ட்ஸ் தினம் 2022 முன்னிட்டு இம்மாதம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவில் பணியாற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை சமூகம், மருத்துவம் மற்றும் கல்வி ஆகியவற்றில் ஒதுக்காமலும், கறைப்படுத்தாமலும் அவர்கள் மீது அன்பு செலுத்தி அரவணைப்பதன் மூலம் சமூக புறக்கணிப்பு இல்லாமையை ஏற்படுத்த வேண்டும். மேலும் எச்.ஐ.வி தடுப்பு மற்றும் பராமரிப்பு குறித்து முழுமையான தகவலை தெரிந்து கொண்டு அவர்தம் வாழ்வில் கடைப்பிடித்தால், நமது சிறந்த தலைமை பண்புகளால் புதிய எச்.ஐ.வி தொற்று ஏற்படாமல் தடுக்கலாம் என சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தெரிவித்தார்.