சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலுக்குள் பட்டியலின சமூகத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்ற இளைஞர் மது போதையில் நுழைந்ததாக திருமலைகிரி தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பவர் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஆபாச வார்த்தைகளால் திட்டி அந்த வாலிபரை அடிக்க முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில் திமுக தலைமை கழகம் சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் டி. மாணிக்கம் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவபெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். 



இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர் பிரவீன் குமார் சேலம் இரும்பாலை காவல் நிலையத்தில் தகாத வார்த்தைகள் திட்டிய மாணிக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இதனிடையே மாணிக்கத்தை விசாரிக்க காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை மற்றும் திருமலைகிரி கிராம மக்கள் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மாணிக்கம் மீது கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூறி, சேலம் இரும்பாலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்நிலைய முன்பாக அமர்ந்து கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சிலர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.



இதையடுத்து மாணிக்கத்தின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டல், ஆபாச வார்த்தைகள் திட்டுதல் உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் நடவடிக்கை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை மற்றும் கிராம மக்கள் கூறுகையில், நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்ல விடமாட்டோம், உயிர் சேதம் ஏற்படும் என்று கிராம மக்கள் ஒன்று திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராம மக்கள் இரும்பாலை காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு வருவதால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது. இதற்கிடையே கைது செய்யப்பட்ட மாணிக்கம் காவல்துறையினரின் பாதுகாப்புடன் நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


இந்த நிலையில் திருமலைகிரி மாரியம்மன் திருக்கோவிலில் நேற்று அனைத்து சாதி மக்களும் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என சேலம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி சேலம் மாவட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உதவியோடு திருமலைகிரி அனைத்து சாதி மக்களும் திருமலைகிரி மாரியம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் அதிகாரிகள் கோவிலுக்குள் மக்கள் செல்வதை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து சென்றனர்.