நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை சேலத்தில் நடத்துவது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடலை ஆய்வு செய்தார். குறிப்பாக கடந்த சில நாட்களாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு விரைவில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அக்கட்சிகள் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மாநாடு நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்.



சேலத்தில் தவெக மாநாடு:


இந்த நிலையில், சேலம் மாவட்டம் தலைவாசல், கெஜல்நாயக்கன்பட்டி, காக்காபாளையம் உள்ளிட்ட மூன்று இடங்களில் மாநாடு நடத்துவதற்காக திடலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந் மற்றும் சேலம் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் பார்வையிட்டனர். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை சேலம் மாவட்டத்தில் நடத்துவதற்காக முடிவு செய்யப்பட்டு அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


10 லட்சம் நிர்வாகிகள் பங்கேற்பு:


இந்த முதல் மாநில மாநாட்டில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட திடல் அமைய உள்ளதாகவும், மாநாட்டை செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது நவம்பர் மாதம் தொடக்கத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, கனடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 



வரலாற்று சிறப்புமிக்க திடல்:


மேலும், சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் உள்ள திடலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திடலானது 2014 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதேபோன்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதே திடலில் மாநாடு நடத்திய பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். சமீபத்தில் நடைபெற்ற 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் மோடி இதே கெஜல்நாயக்கன்பட்டி திடலில் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். எனவே வரலாற்று சிறப்புமிக்க இந்த கெஜல்நாயக்கன்பட்டி திடலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சேலம் மாவட்ட விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.