தமிழகத்தில் நகர்புற தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.



முன்னதாக, சேலம் மாவட்டம் அம்மாபேட்டை மண்டலம், வாய்க்கால் பட்டறை அரசு நடுநிலை பள்ளி அருகில், நகருக்குள் வனம் திட்டத்தின் கீழ் நாட்டு மரக்கன்று நாடும் திட்டத்தையும் அதனை தொடர்ந்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினையும் துவக்கி வைத்த நகர்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சீலாவாரி ஏரியியை தூர்வாரி ஒழுங்குப்படுத்தும் பணிகளையும் தொடங்கி வைத்தார். 



சேலத்தில் நகர்புற வளர்ச்சித்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் வார்டுகளை மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒரே சீரான அளவு வாக்காளர்களை கொண்ட வார்டுகளை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக உள்ளதாகவும், மாநகராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.



மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் பாசனமற்ற ஏரிகளை தூர்வாரி பாசனபகுதிகளுக்கு மழை நீரை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்படும் என்றும் கூறினார். பாதாள சாக்கடை திட்ட பணியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இப்பணிகள் முடிவடையும்; ஒப்பந்ததாரர்களுக்கு தேவையான உதவிகளை செய்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். சேலம் திருமணிமுத்தாறு கழிவு நீர் கலப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழகத்தில் கழிவு நீரை நீர் நிலைகளில் கலப்பதை தடுக்க கழிவு நீரை மறுசுழற்சி செய்து தொழிற்சாலைகளுக்கு வழங்கும் பணி துவங்கியுள்ளது; விரைவில் இத்திட்ட பணிகள் முழுமையாக விரிவுப்படுத்தப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.


நிகழ்ச்சியின் போது, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், சேலம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் பல அரசு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.