நடிகர் அஜித் குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று அதிகாலை ஒரு மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி சேலம் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு மணிக்கு 12 திரையரங்குகளில் துணிவு திரைப்படம் திரையிடப்பட்டது. முன்னதாக நேற்று இரவு 10 மணிக்கு திரையரங்குகளில் குவிந்த அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சேலம் ஏஆர்ஆர்எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் 5 திரைகளிலும் துணிவு படம் அதிகாலை ஒரு மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்திருந்தனர். இதனை அறிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் காவல்துறையின் அனுமதி இன்றி பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்துள்ள காட்டு பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்ற இளைஞர் திரையரங்கில் கதவின் மீது ஏறி உள்ளார். தவறி கீழே விழுந்தால் பிரதீப்பிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக நினைத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக தியேட்டருக்கு வந்த ஆம்புலன்ஸ் பிரதீப்பிற்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அப்போது பிரதீப் தனக்கு எதுவும் ஆகவில்லை. நான் நன்றாக இருக்கிறேன் என்று கூறினார். இருப்பினும் மருத்துவர்கள் அவரை சிகிச்சைக்கு ஒத்துழைக்குமாறு கூறினர்.
ஆனால் பிரதீப் அவசர சிகிச்சை பிரிவில் அல்டிமேட் ஸ்டார் அஜித் வாழ்க, துணிவு வாழ்க என்று கூச்சல் இட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருடன் வந்த இளைஞர்கள் பிரதீப்பிடம் உனக்கு படிப்பு முக்கியம் இல்லையா? என்று கேட்டனர். அதற்கு சிறிதும் யோசிக்காமல் படிக்கலைன்னா போயிட்டு போறேன் என்றார். மேலும் உனக்கு அப்பா அம்மா முக்கியமா? அஜித் முக்கியமா? என்று கேட்டதற்கு, அஜித் தான் முக்கியம் என்று கூறினார். பின்னர் அரசு மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களிடம் தன்னை துணிவு படத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவர்கள் சிகிச்சைக்கு ஒத்துழைக்க கட்டாயப்படுத்தினர்.
ஒரு கட்டத்திற்கு மேல் பிரதீப் முதல் உதவி செய்யப்பட்டு காலின் கட்டினைப் பிரித்து சகஜமாக நடக்கத் தொடங்கினார். அதனைக் கண்ட மருத்துவர்கள் இவர் நன்றாக இருக்கிறார் எதற்காக அழைத்து வந்தீர்கள் என கேட்டனர். அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் விசாரித்த போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துள்ளேன். எனது கால் எப்போதும் சிறிது வளைந்து தான் இருக்கும். அதனை தவறாக புரிந்து கொண்டு காவலர்கள் தன்னை துணிவு படத்தை பார்க்க விடாமல் இவ்வாறு செய்துவிட்டனர் என்று கூறினார். பின்னர் காவல் துறையினர் அங்கிருந்து அவரை அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த இளைஞர் நடிகர் அஜித் நடித்த துணிவு படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று கூச்சலிட்ட சம்பவம் மருத்துவமனையில் சிரிப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்ட பிரதீப் சாலையில் வேகமாக ஓடி மீண்டும் துணிவு படம் பார்க்க சென்றார்.