தமிழக முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் டாக்டர். பிரபு திலக். இவர் சேலம் மாநகராட்சி பிருந்தாவன் சாலையில் வசிக்கும் தொழில் அதிபர் கண்ணுசாமி என்பவரின் மகள் ஸ்ருதியை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த நிலையில் சுருதி தனது தந்தை கண்ணுசாமியுடன் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில், தனக்கும் தமிழக முன்னாள் டிஜிபி திலகவதி அவர்களின் மகன் டாக்டர்.பிரபுதிலக்குக்கும் கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது தங்கள் இருவருக்கும் 14 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஏழு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். திருமணத்தின்போது சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் தனது கணவர் மருத்துவ பேராசிரியராக பணியாற்றி வந்தார்.


ஆரம்ப முதலே அவருடைய நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. எனது கணவருக்கும் அவருடன் பணியாற்றி வந்த பெண் டாக்டர் ஒருவருக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்தது. அந்த பெண் டாக்டர், குடும்ப நண்பர் என்பதால் முதலில் எனக்கு தெரியவில்லை.



அதன்பின் நாங்கள் சென்னைக்கு வந்து மாமியார் திலகவதியுடன் தங்கினோம். அங்கு வேறொரு பெண் மருத்துவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இப்படி பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சினிமா படம் எடுக்கிறேன் பணம் வேண்டும் என்று எனது அப்பாவிடம் கேட்டார். எனது அப்பாவும் வீட்டை அடமானம் வைத்து ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்தார் என்று கூறினார். ஒரு முறை கடந்த 2016-ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து ஏராளமான மது பாட்டில்களை தனது காரில் வைத்து எனது கணவர் கடத்தி வந்த போது அப்போது காவல்துறையினர் அவரை பிடித்து விட்டனர். இதனால் மனம் வெறுத்துப் போன அவர் மது போதைக்கு அடிமையானார். அன்று முதல் தன்னை அடித்து துன்புறுத்தி வருகிறார்.


கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு தன்னை கடுமையாக தாக்கியதில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அப்போது சென்னை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த போது, மாமியார் திலகவதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணை இல்லாமல் செய்து விட்டார். 



மேலும் என்னிடம் இருந்த 170 சவரன் நகை மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு சித்ரவதை செய்தனர். எனவே எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் தான் தற்போது குழந்தைகளுடன் தற்போது அப்பா வீட்டுக்கு வந்து விட்டேன். எனது உயிருக்கும் எனது குழந்தைகள் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு கேட்டு தற்போது சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். தொடர்ந்து கூறியவர் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி என்பதால் மாமியார் திலகவதி , தன்னை எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டல் விடுகிறார்.


எனவே தனது நகை மற்றும் பணத்தை மீட்டு தருமாறு புகார் மனு வழங்கி உள்ளதாக சுருதி தெரிவித்துள்ளார். முன்னாள் டிஜிபி திலகவதி, மற்றும் அவர் மகன் டாக்டர் பிரபு திலக் மீதும் ஸ்ருதி வரதட்சணை புகார் மற்றும் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் டிஜிபி திலகவதி, அவரது மகனை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால், எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. அவர்கள் தரப்பில் இருந்து கருத்துகள் வெளியான பின்பு அதனை பதிவு செய்வோம்.