தருமபுரி மாவட்டத்தில், திரு கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். தருமபுரி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான நீர்வழிப் பாதைகள், நிலங்கள் என 3000 ஏக்கர் நிலங்கள்  இன்னும் ஓராண்டுக்குள் மீட்கப்பட்டுவிடும். தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

தருமபுரி மாவட்டத்தில் முழுமையாக ஆய்வு செய்த பிறகு, அதிகளவு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது தெரியவரும். தமிழகத்தில் அதிக சொத்துக்களை கொண்டுள்ளது இந்து சமய அறநிலைத்துறை மட்டுமே. அது ஒருங்கிணைக்கப்பட்டால் மட்டும்தான் முறையான வருவாய் கிடைக்கும். அறநிலை துறையின் உபரி வருவாயிலிருந்து ஒரு தனி பட்ஜெட் போடலாம். இந்த வருவாய் எல்லாம் தனிப்பட்ட நபர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வருவாய் அறநிலையத் துறைக்கு நேரடியாக வரும். 

 


 

மேலும் மற்ற துறைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்தத் துறைக்கு உள்ளது. இதில் ஆதரவற்றோர் நலம், ஏழை குழந்தைகளின் கல்வி, இவை எல்லாம் அறநிலையத் துறையால் கொடுக்க முடியும். திருதொண்டர் சபையின் நோக்கம் இந்த நிகழ்வில் நடக்க வேண்டும். ஏழை குழந்தைகள் கல்வி பெற வேண்டும். நீர்நிலைகள் பொது சொத்துக்கள் அனைத்தும் இதில் நடவடிக்கை இருக்கும். அனைத்து சர்வே எண்ணும் சப் டிவிஷன் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து நிலங்களும் மீட்கப்படும்.

 


 

 

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறார். தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.  இந்த ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசுக்குச் சொந்தமான நிலங்களை வாழ்வாதாரம் என்ற போலியான காரணம் கூறி யாரும் ஏமாற்ற முடியாது. உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. அவ்வாறு அவர்கள் இருக்கும் பட்சத்தில் முறையான வாடகை குத்தகைக்காக விடப்படும். திருக்கோயில் நிலங்கள் நீர்நிலைகள் பொதுச் சொத்துக்கள் இதை மூன்றும் குறித்து இந்த ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 

200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தாலும் கோவில் சொத்துக்களுக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. திருக்கோயில் சொத்துகளுக்கு எதிராக எந்த நீதிமன்றமும் உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது. எந்த விதமான நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு இருந்தாலும் அகற்றப்பட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் 3000 ஏக்கருக்கு அதிகமாகவே ஆக்கிரமிப்பில் இருக்கும். இதற்காக மாவட்ட ஆட்சியர் முதல்நிலை நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அரசியல்வாதிகள், அலுவலர்கள் என யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நில ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அதற்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.