சேலம் மாவட்டத்தில் ஆடி பண்டிகை என்பது மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். ஆடி மாதத்தில் முதல் நாளான தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தேங்காய் சுடும் பண்டிகையில் ஈடுபட்டு வருகின்றனர்.


தேங்காய் சுடும் முறை:


தேங்காயில் உள்ள நார்களை எடுத்து, தேங்காயின் கண் பகுதியில் என்று சொல்லக்கூடிய மேல் பகுதியில் ஒரு சிறு துளையிட்டு அதில் உள்ள நீரை தனியாக பிரித்தெடுத்துவிட்டு, பின்பு வெள்ளம், நாட்டுச் சர்க்கரை, பச்சரிசி, பாசிப்பருப்பு, முந்திரி மற்றும் பல பொருட்கள் அதோடு சேர்த்து, தேங்காயை உட்பகுதியில் செலுத்தி பின்பு அதனை நெருப்பில் சுட்ட பின் மாரியம்மனுக்கு படைத்து விட்டு ஆடிப்பண்டிகையை, சேலம் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக வரவேற்பார்கள்.



தேங்காய் சுடுவதின் காரணம்:


தேங்காவில் ஓட்டை பிரித்தால் தான் அதில் உள்ள தேங்காய் கிடைக்கும். அதுபோன்ற நம் மனதில் உள்ள கசப்பு, துன்பம், வேதனை என அனைத்தையும் எடுத்து வீசிவிட்டு. வெல்லம், நாட்டுச்சர்க்கரை போன்ற இனிப்புகளை படைத்து, இனிமையாக வாழ்க்கை அருள வேண்டும் என்பதற்காக, ஆடிப் பண்டிகையை சேலம் மக்கள் கொண்டாடுவார்கள்.


இதுகுறித்து தேங்காய் சுடும் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் கூறுகையில், ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் நாள் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் ஆண்டுக்காண்டு மக்களுக்கு இதன் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. முன்னோர்கள் ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக உறவினர்களோடு தேங்காய் சுட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் தேங்காய் சுடும் பண்டிகை தற்போது அழிந்து வரும் பண்டிகைகளில் ஒன்றாக உள்ளது. இதனால் ஆண்டு தோறும் தேங்காய் சுட பயன்படுத்தும் பொருட்களின் விற்பனையும் சரிந்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.



இந்த மாதம் முழுவதும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காளியம்மன் மற்றும் மாரியம்மன் திருக்கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். ஆடி முதல் நாள் என்பதால் சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது, அம்மாபேட்டை பலபட்டரை மாரியம்மன் கோவிலில் மாரி அம்மனுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.


இதைத் தொடர்ந்து ஆடி முதல் வாரத்தில் அம்மனுக்கு பூச்சாட்டுதல், இரண்டாம் வாரம் கம்பம் நடுவது, மூன்றாம் வாரம் பூ கரகம் எடுப்பது, அலகு குத்துதல், பொங்கல் வைப்பது, வண்டி வேடிக்கை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். 


இன்று ஆடி முதல் நாள் என்பதால் காவிரி ஆற்றில் குளிப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் திறந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் காவிரி ஆற்றில் குளிக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் நாளில் அம்மாவாசை வந்துள்ளதால் நீர் நிலைகளில் தங்களது குடும்பத்தில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் விடுவதற்காக ஏராளமான பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.