தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் மேம்படுத்துதல் தொடர்பாக தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மரு.மதிவேந்தன் ஒகேனக்கல்லில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பரிசல் துறையில் இருந்து பரிசல் பயணம் செய்து ஐந்தருவி பகுதிகளை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து மெயின் அருவி தொங்குபாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற அமைச்சர் மதி வேந்தன் கொட்டும் மழையில், சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய வகையில் மேற்கொள்ள கூடிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். முன்னதாக பரிசல் துறையில் இருந்த சுற்றுலா பயணிகள் இடம் ஒகேனக்கல் சுற்றுலா தளம் குறித்தும் மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

 



 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன்,

 

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவது குறித்து இன்று பார்வையிட வந்தோம். ஒகேனக்கல் அருவிகள், நடைபாதை மற்றும் பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டோம். இங்குள்ள வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான கழிப்பிட வசதிகள், ஆடை மாற்றும் அரை, ஆயில் மசாஜ் செய்யும் இடம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை தேவைகளை மேம்படுத்துவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் மேற்கொள்ளவும் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

 



 

இதுகுறித்து தமிழக முதல்வருடன் விரைவில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். சுற்றுலாத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு சுற்றுலா தலங்களை மேம்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை மேம்படுத்த பெரும் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டு சுற்றுலா தளத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்படும். மேலும் ஒகேனக்கல்லில் சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்காக்கள் மற்றும் செயற்கை நீர்வீழ்ச்சிகள் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்து சாத்தியக்கூறுகள் இருப்பின் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முதற்கட்டமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை மேம்படுத்த 15 கோடி நிதி ஒதுக்கி மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். 

 



 

அதேபோல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாணியாறு அணை உள்ளிட்ட அனைத்து அணை பகுதிகளில் பொழுது போக்கு பூங்காக்கள் மற்றும் படகு இல்லம் அமைப்பதற்கும் ஆய்வுகள் மேற்கொண்டு சாத்தியக்கூறுகள் இருந்தால், அதை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்சினி தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) கூடுதல் ஆட்சியர் மரு.வைத்திநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.