சேலம் மாநகர் மெய்யனூர் பகுதியில் இயங்கி வரும் எச்டிஎப்சி என்ற தனியார் வங்கியின் மேலாளராக சிவக் குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதே வங்கியில் பிரகாஷ் என்பவர் நகை பிரிவில் துணை மேலாளராக கடந்த மூன்று மாதங்களாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் நகை சாரிபார்க்கப்பட்டபோது அனைத்தும் சரியாக இருந்த நிலையில் 10 நாட்கள் பிரகாஷ் விடுமுறையில் சென்றுள்ளார். அவருக்கு பதிலாக பொறுப்புகளை மற்றொரு அலுவலரான ஆர்த்தி என்பவருக்கு வழங்கப்பட்டது.



இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நரசோதிபட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் தங்க வளையல்கள், செயின் என 137 கிராம் வைத்து மூன்று லட்சத்து 85 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதனுடைய மொத்த மதிப்பு 6 லட்சத்து 43 ஆயிரம் ஆகும். இதனிடையே வங்கி மூலம் நகைகளை சரிபார்க்கப்பட்டபோது காணவில்லை என தெரியவந்தது.



இதுதொடர்பாக பிரகாஷ் மற்றும் இதே பிரிவின் மேலாளர் நூர்தின் ஆகியோரிடம் விசாரித்தபோது நகை காணாமல் போனது பற்றி எந்த விவரமும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இதுதொடர்பாக வங்கி மேலாளர் சிவக்குமார் சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் நகைகளை கண்டுபிடித்து கொடுக்கும்படி புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் சேலம் பள்ளப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.