மாரண்டஹள்ளி அருகே வயலில் வைத்த மின்கம்பியில் சிக்கி உயிரிழந்தவரை கிணற்றில் வீசியவர் மீதும் அதற்கு உடந்தையாக இருக்கின்ற காவல்துறை, மின்சாரத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் புகார் கொடுத்தனர்.

 

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அடுத்த சாஸ்திரிமுட்லு கிராமத்தைச் சார்ந்த திம்மப்பன் காளியம்மாள் தம்பதியினர்(குரும்பர் சமூகம்) குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு  பிள்ளைகள் உள்ளனர். போதிய வசதி இல்லாத காரணத்தால் திம்மப்பன் ஓசூர் பகுதிக்கு சென்று தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20 ஆண்டு காலமாக காளியம்மாவிற்கும் அதிக பகுதியைச் சார்ந்த மாதேவன்(வேறு சமூகம்) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காளியம்மாள் கணவர் திம்மப்பன் வெளியூர் வேலைக்கு செல்லாமல், உள்ளூரிலேயே   இருந்து வந்துள்ளார். அப்பொழுது காளியம்மாவுக்கும், மாதேவனுக்கும் இருந்த தொடர்பை அறிந்து, இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் கடந்த ஆறு மாத காலமாக காளியம்மாள் மாதேவனுடன் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாதேவன் அடிக்கடி இரவு நேரங்களில் மது போதையில், திம்மப்பன் வீட்டு அருகே வந்து தகராறு செய்து கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 11ஆம் தேதி இரவு மாதேவன், திம்மப்பன் வீட்டு அருகே அமர்ந்து தகராறு செய்ததாக தெரிகிறது. அப்பொழுது திம்பப்பனுக்கும் மாதேவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாகியுள்ளது.

 



 

தொடர்ந்து அடுத்த நாள் காளியம்மாள் வழக்கம் போல் ராயக்கோட்டை பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். அப்பொழுது மீண்டும் திம்மப்பனுக்கும் மாதேவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது உனது பிள்ளைகளுக்கு பணம் செலவழித்து, நான் தான் திருமணம் செய்து வைத்தேன் என்று மாதேவன் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பானது. இதனையடுத்து மாலை காளியம்மாள் வீடு திரும்பிய போது, நடந்து சம்பவத்தை காளியம்மாவுக்கு தெரிவித்துள்ளனர். அப்பொழுது இரவு எட்டு மணி அளவில் காளியம்மாள், மகாதேவனை சந்திப்பதற்காக, அவரது வீட்டு பக்கும் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நேரம் ஆகி வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் உறவினர் வீட்டில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் கிடைக்காத நிலையில் மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து நான்கு நாட்களுக்கு பிறகு அதே பகுதியில் உள்ள கிணற்றில் காளியம்மாள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 



 

தொடர்ந்து மாரண்டஹள்ளி காவல் துறையினர் காளியம்மாள் உடலை மீட்டு பிரயோக பரிசோதனை செய்து ஒப்படைத்துள்ளனர். ஆனால் காளியம்மாள் நன்றாக நீச்சல் தெரிந்த நிலையில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்வதற்கு வாய்ப்பில்லை என்று குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. இதனை தொடர்ந்து மாதேவன் வயலில் இரவு நேரத்தில் கள்ளத்தனமாக மின்சாரம் விடுவதை அறிந்து அந்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது மாதேவனின் கடலைத் தோட்டத்தில் இருந்த மின்கம்பியில் காளியம்மாவின் தலைமுடி இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்து காவல் துறையினரிடம் சாவில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் மாதேவன் மற்றும் அவர் குடும்பத்தினர் அடித்து கொலை செய்திருக்கலாம், கொலை செய்து கிணற்றில் வீசி இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். ஆனால் மாரண்டள்ளி காவல் நிலையத்தில், அது தற்கொலை தான். வேண்டுமென்றால் கடலை தொட்டக்காரரிடம் பணம் வேண்டும் என்றால் வாங்கி தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதனால் திம்மப்பன் குடும்பத்தினர் தங்களுக்கு நீதி வேண்டும் என பல்வேறு இடங்களுக்கு சென்று மனு கொடுத்த்ள்ளனர். ஆனால் இதுவரை ஒரு மாத காலம் ஆகியும் இவர்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. அதனால் இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இந்த புகார் மனுவில் திம்மப்பன் மகள் நவீன தனது தாய் காளியம்மாளை,  மாதேவன் மற்றும் அவரது மனைவி ஜெயலலிதா, அவர்களது உறவினர்கள் கன்னியப்பன், சாம்ராஜ் ஆகியோர் அடித்து மின் கம்பியில் தள்ளிவிட்டு கொலை செய்து, மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக கிணற்றில் வீசி உள்ளனர். அதற்கு காவல்துறையும், மின்சார துறையும் உறுதுணையாக இருந்துள்ளனர். எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காளியம்மாளின் மகள் நவீன மற்றும் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் அவ்வாறு இல்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் காளியம்மாள் குடும்பத்தினர் தெரிவித்தனர்.