சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏற்காடு அடிவாரம் பகுதியை நோக்கி 56 நம்பர் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை புதூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் ஓட்டிச் சென்றார். நாமக்கல் மாவட்டம் அத்தனூர் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (56) என்பவர் நடத்துனராக இருந்தார். பேருந்து சேலம் செட்டிசாவடி பகுதியில் சென்றுவிட்டு திரும்பும்போது செட்டிசாவடி அருகே பசுவக்கல் பகுதியில் நாய் குறுக்கே வந்ததால் ஓட்டுநர் சீனிவாசன் திடீரென பிரேக் பிடித்து பேருந்தை நிறுத்தியுள்ளார். 



அப்போது நிலை தடுமாறிய நடத்துனர் ராஜேந்திரன் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் தலையிலிருந்து அதிக அளவில் ரத்தம் வரத் தொடங்கியுள்ளது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் அங்கு வராததால் அடிபட்டு இருந்த ராஜேந்திரனை பேருந்திலேயே ஏற்றிக்கொண்டு நடத்துனர் சீனிவாசன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தலையில் பலத்த காயமடைந்ததால் நடத்துனர் ராஜேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை வளாகத்தில் அரசு பேருந்து நுழைந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


 


சேலத்தில் நடந்த மற்றொரு விபத்தில் ஆத்தூரில் லீ பஜார் பகுதியில் உயிரிழந்த உறவினரின் 30 ஆம் நாள் கும்பிடும் துக்க நிகழ்ச்சிக்காக வந்தவர்கள் இரவு நேரத்தில் டீ அருந்துவதற்காக தேசிய நெடுஞ்சாலை பக்கம் ஆம்னி வேனில் அனைவரும் வந்துள்ளனர். சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து நள்ளிரவில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது ஆம்னி பேருந்தும், காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை அழைத்து வரப்பட்டனர். இதில் 11 வயது சிறுமி தன்சிகா சிகிச்சை கலைத்து வந்தவுடன் மருத்துவமனையில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஐந்து பேருக்கும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  



மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமி தன்ஷிகா உடல் உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்து மேலும் 5 பேருக்கு தொடர்ந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


விபத்து குறித்த தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அதன்பின் அங்கிருந்து விபத்து நடந்த சேலம் சென்னை நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஆத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.