அதிமுக தொண்டர்களை காப்பாற்றாமல், பொய் வழக்கு போட்டுள்ள கே.பி.அன்பழகன் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை அனுபவிக்க முடியாது, தொண்டர்களின் சாபம் அவரை சும்மா விடாது என  முன்னாள் எம்.எல்.ஏவும் அமமுக நிர்வாகியுமான ஆர்.ஆர்.முருகன் கூறியுள்ளார். தருமபுரி மாவட்டம் அரூர் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றிற்காக வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது முருகன், கடந்த ஆண்டு தம்பிசெட்டிப்பட்டி பகுதியில் தனியார் சுவற்றில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விளம்பரம் எழுதுவது தொடர்பாக அதிமுக கிளைச் செயலாளர் ஆறுமுகம் என்பவரை தாக்கியதாக எங்கள் மீது இந்த வழக்கு முன்னாள் அமைச்சர் அன்பழகன் தூண்டுதலால் பொய் வழக்கு போடப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்பழகனின் உதவியாளர், டிரைவர் இருவரை ராஜேந்திர பாலாஜிக்கு உதவியதாக காவல் துறையினர் கைது செய்தனர். 

 

உண்மை அது அல்ல, அன்பழகனின் சொத்து விவரங்கள் அனைத்தும் அவர்களுக்குத் தெரியும், அது தொடர்பாக அவர்கள்  இருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள். இதனால்  தன்னை காப்பாற்றிக் கொள்ள கட்சியினரை பயன்படுத்தி போராட்டம் நடத்தினார். அவருக்கு பல கோடிக்கு சொத்து எப்படி வந்தது, அரூர் பிடிஆர்வி பள்ளி மட்டும் 110 கோடி மதிப்பு, அதிமுகவில் இருந்து  சொத்தை சேர்த்த இவர் கட்சிக்காரரை  நடுத்தெருவில் விட்டுள்ளார்.

 



 

பென்னாகரம் பகுதியை சேர்ந்த டி.ஆர்.அன்பழகன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை கே.பி.அன்பழகன் கண்டிக்கவில்லை, அறிக்கை கூட விடவில்லை, இவரை விட, டி.ஆர்.அன்பழகன் சீனியர் கட்சி நிர்வாகி. அப்போ வரவில்லை தன் உதவியாளர் என்பதால், பொய் வழக்கு என ஆர்பாட்டம் நடத்துகிறார். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு உண்மையான அதிமுகவின் தொண்டர்கள் யாரும் வரவில்லை. ஒதுங்கி தான் நின்றார்கள். கே.பி.அன்பழகன் பதவிக்காக நாடகம் போடுபவர். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, அவர் பிறந்த நாளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைத்தார். ஆனால் ஜெயலலிதா இறந்தவுடன் அதை நிறுத்தி விட்டார். அவருக்கு இந்த கட்சி தொண்டர்களை பற்றி அக்கறையில்லை. 



 

கே.பி.அன்பழகன் அமைச்சராக இருந்தபோது, கோடி கட்டியாக கொள்ளையடித்துள்ளார். ஆனால் கட்சிக்காரர்களை பழிவாங்கியுள்ளார் எங்களின் பாவம் அவரை சும்மா விடாது, அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தெய்வங்கள் பார்த்துக் கொள்ளும். அவர் சேர்த்து வைத்து சொந்துக்களை அவரால் அனுபவிக்க முடியாது. அதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம். இந்த அதிமுக தொண்டர்களின் சாபம் சும்மா விடாது என அமமுகவை சேர்ந்து முன்னாள் எம்எல்ஏ ஆர்.ஆர்.முருகன், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சாபம் விட்டார்.