முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை மறைத்ததாக தேனி மாவட்டத்தை சேர்ந்த வழக்குரைஞர் மிலானி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணை சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வழக்கினை விசாரித்த நீதிபதி கலைவாணி இந்த வழக்கு தொடர்பாக 30 நாட்களுக்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு சேலம் மத்திய குற்ற பிரிவினருக்கு உத்தரவிட்டார். மேலும் பொதுநல வழக்கை தொடர்ந்த வழக்கறிஞர் மிலானிக்கு உரிய பாதுகாப்பை வழங்கவும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.



மேலும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 125A(1), 125A(ii), 125A(iii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நான்காம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சொத்து விவரங்கள், வருமான வரி கட்டியதற்கான ஆதாரங்கள், அவரது மனைவி வருமான வரி கட்டியதற்கான ஆதாரங்கள் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் திரட்டி வந்தனர். அதே நேரத்தில் புகார்தாரரான மிலானியை காவல்துறையினர் முதற்கட்டமாக விசாரித்துள்ளனர். மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் மே 26 ஆம் தேதி (இன்று) விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி இன்று சேலம் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு குறித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். 


ஆனால் இதுகுறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக எனது பெயரில் எந்த சொத்துக்களும் நான் வாங்கவில்லை. இந்த வழக்கு வேண்டுமென்றே போடப்பட்ட வழக்கு என தெரிவித்துள்ளார்.