கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதனால் கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு நீர்வரத்து  வினாடிக்கு 3,150 கன அடியாக உள்ளது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 83.51 அடியாக உள்ளது. மேலும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,345 கன அடியாக உள்ளது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 124.50 அடியாக உள்ளது.

 


 

இந்நிலையில் கபினியிலிருந்து 2,000 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் வினாடிக்கு 3,600 கன அடி என இரண்டு அணைகளிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5,600 கன அடி தண்ணீர்  திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கேரளா, கர்நாடக, தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் என மாறி, மாறி வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 40,000 கன அடியாக இருந்த நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 30,000 கன அடியாக இருந்தது. தற்போது மழை அதிகரித்திருப்பதால், நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, இன்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 30,000 கன அடியிலிருந்து 33,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

 


 

இதனால் ஒகேனக்கலில் ஐந்தருவி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, பிரதான  அருவிக்கு செல்லும் நடைப்பாதைக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளப் பெருக்கால், கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து வந்தனர். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகள் நலனுக்காக சின்னாறு முதல் கோத்திக்கல் வரை மாற்று வழியில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. 

 


 

மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால்,  ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதால், மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கர்நாடக அணைகள் நிரம்பியுள்ளதால், காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது என, காவிரி கரையோர மக்களுக்கு கர்நாடக நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.