தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி தமிழகம் முழுவதும் பரவி சேலம், ஈரோடு, நாமக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நடைபெறத் தொடங்கியுள்ளது.




இந்நிலையில் இந்த ஆண்டு தருமபுரி அடுத்த தடங்கம் மைதானத்தில் 2-வது மாபெரும்  ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. இந்தப் போட்டிக்காக கடந்த 3 நாட்களாக 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்யப்பட்டிருந்தனர். தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு, ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழியுடன், போட்டியை தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன் கொடியசைத்து  ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் வாடி வாசல் வழியாக கோயில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசல் வழியாக துள்ளி வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயற்சி செய்தனர்.




இந்த போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்கு மாடுபிடி வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி, சில்வர், பணம் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுகளையும் விழாக்குழுவினர் வழங்கி வருகின்றனர். முதல் சுற்றில் 50 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து இந்த ஜல்லிக்கட்டு போட்டி மைதானத்தில் 5 மருத்துவ குழுக்களும் 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் 400 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு  வருகின்றனர். தருமபுரி  மாவட்டத்தில் இந்தாண்டின் 2-வது ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதால் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்து வருகின்றனர்