பஞ்சு மற்றும் நூல் பதுக்கலை தடுத்து, ஏற்றுமதிக்கு தடை செய்தால் மட்டுமே நூல் விலையை குறைக்க முடியும் குறைக்க முடியும் என தமிழ்நாடு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர் இதே நிலை நீடித்தால் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்



பஞ்சு மற்றும் நூல் விலை கட்டுப்படுத்த வலியுறுத்தி, சேலத்தில் தமிழ்நாடு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சங்கத்தின் மாநில தலைவர் அழகரசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”கடந்த 18 மாதங்களில் நூல் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது பஞ்சு விலை ஏற்றத்தால் விவசாயிகளுக்கு பெரியளவில் லாபம் இல்லை, இடைத்தரகர்களாக உள்ள எம் என் சி என்ற தனியார் நிறுவனம் போன்றோர்கள் தான் அதிக லாபம், இதுபோன்ற தனியார்கள் 90 சதவீதம் அளவில் பஞ்சு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து அவர் கூறும்போது, இந்தியாவில் பஞ்சு உற்பத்தி குறையவில்லை, ஆனால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மற்றொருபுறம் பதுக்களும் அதிகரித்துள்ளது. இந்த செயற்கை தட்டுப்பாட்டினால் தான் நூல் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. இதனை மத்திய அரசு பஞ்சு பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.



இந்த நிலையில் பஞ்சு பதுக்கி வைத்திருப்பது குறித்து மத்திய அரசுக்கு தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, அதனை கண்டுகொள்ளவில்லை எனவே தான் தமிழகத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்திலும் விரைவில் போராட்டத்தை நடத்த உள்ளோம் என்றார். தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ஜவுளித்துறையில் வர்த்தகம் நடைபெறுகிறது. எனவே ஜவுளி தொழிலை பாதுகாக்க மத்திய அரசு பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும், உள்நாட்டு தேவைபோக பருத்தி அதிகம் இருந்தால், வெளிநாட்டு ஏற்றுமதி செய்யலாம். இவ்வாறு மேற்கொண்டால் மட்டுமே நூல் விலையை கட்டுப்படுத்த முடியும் உலகில் ஜவுளி உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. நூல் விலை இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜவுளி உற்பத்தி என்பது கேள்விக்குறியாகிவிடும் என்று வேதனை தெரிவித்தனர்.


இன்று சேலம் மாவட்டம் அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, எருமாபாளையம், குகை பகுதிகளில் நூல் விலை உயர்வை குறைக்கவும், பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கக்கோரி சேலம் கைத்தறி ஜவுளி மொத்த வியாபாரிகள் சங்கம் வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பில் ஈடுபட்டனர். இதனால் நேற்று ஒரு நாள் மட்டும் சேலம் மாவட்டத்தில் 30 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.