சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் வழிகாட்டுதல் படி வரும் 23ஆம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்ட நிர்வாகம் விதித்த தடையை தொடர்ந்து ஏற்காடு நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் அடிவாரம் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டன. இதன் காரணமாக ஏற்காட்டை காண ஆர்வத்தோடு வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். வார இறுதி நாட்களை தவிர்த்து பிற நாட்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று, RTPCR பரிசோதனை முடிவு சான்று வைத்திருத்தல் அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்காட்டில் பணிபுரிபவர்கள் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் அத்தியாவசிய தேவைக்காக ஏற்காடு செல்பவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்த பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி அதற்கான சான்று, சமீபத்தில் எடுக்கப்பட்ட RTPCR பரிசோதனை முடிவுகளை காண்பிக்க வேண்டும், இல்லாவிடில் சோதனை சாவடியிலேயே மருத்துவ குழுவினர் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த பிறகு ஏற்காடு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. சூழ்நிலையைப் பொருத்து இனி வரும் வார இறுதி நாட்களிலும் தடையை நீடிப்பது குறித்து சேலம் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.