தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் மாணவ மாணவியர்கள் என 200 பேர் தங்கி பயின்று வருகின்றனர். கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மூன்றாம் ஆண்டு படிக்கும், நான்கு மாணவர்கள், இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒரு சில மாணவர்களை ராக்கிங் , செய்து உள்ளனர். குறிப்பாக உள்ளூர் மாணவர்கள் வெளியூரில் இருந்து வந்து தங்கி படிக்கும் மாணவர்களை அதிகளவில் கிண்டல் கேலி செய்துள்ளனர். இதில் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் சேர்ந்த சரவணன் என்பவரை, 4 மாணவர்கள் சேர்ந்து கொண்டு முட்டி போட வைத்தும், சிகரெட் மற்றும் மது வாங்கி வரச் சொல்லியும், டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது.



இதை மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் விடுதி காப்பாளர், உதவி காப்பாளர் ஆகியோரிடம் தெரிவித்துள்ளனர்.  ஆனால் ராகிங் செய்த மாணவர்கள் தருமபுரி நகர பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் விடுதி காப்பாளர்கள் அதனை மூடி மறைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் தொடர்ந்து அடிக்கடி மாணவனை தொந்தரவு செய்ததால் மனமுடைந்த மாணவன் சரவணன், கடந்த 5 ஆம் தேதி பிற்பகல், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையை சாப்பிட்டும், இடது கையை அறுத்துக் கொண்டும் தற்கொலைக்கு முயற்சி செய்து கொண்டார். இதனை கண்டு உடனடியாக சகமாணவர்கள் அருகில் இருந்த அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

 

அந்த மாணவனை மருத்துவர்கள் பரிசோதனை செய்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனா். இதனையடுத்து மாவட்ட காவல் துறை, மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் ராக்கிங் செய்வது குறித்தும், அதனால் சில மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவது குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவ கல்லூரி முதல்வர் முதல்வரிடம் அறிவுறுத்தி உள்ளனர். 

 



 

அதனையடுத்து ராகிங் செய்த 4 மாணவா்களையும் மருத்துவக் கல்லூாி நிா்வாகம் இடைநீக்கம் செய்தது. மேலும் மாணவர்களின் புகாரால், விடுதி காப்பாளர் மாற்றப்பட்டு, புதியதாக 2 பேராசிரியர்களை காப்பாளர்களாக விருப்ப அடிப்படையில் பணியமர்த்தியுள்ளனர். தொடர்ந்து மருத்துவ கல்லூரி முதல்வரின் புகாரையடுத்து,  மாணவர்களை ராகிங் செய்யும் கேலி வதை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய, தருமபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-1 நீதிபதியிடம் ஒப்புதல் பெற்று, சம்மந்தப்பட்ட 4 சீனியர் மாணவர்களின் மீது தருமபுரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கல்லூரியில் இதுப் போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.