சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து காணப்படுவதாகவும், அதனை தடுக்காத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை, முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தின் போது திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை, "வேலியே பயிரை மேய்வது போல், ஆளுங்கட்சியினரே போதைப் பொருள் விற்பனை என்ற ஈன தொழிலை செய்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார். அதேபோல் சென்னை மாநகரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த ஃபப் எனப்படும் தனியார் ஆடம்பர மதுக்கூடங்கள் தற்போது அதிக எண்ணிக்கையிலான மதுக்கோட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தார். அதேபோன்று ஹேப்பி ஸ்ட்ரீட் என்று நிகழ்ச்சிகள் மூலம் இளைஞர்களையும் சீரழிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியதுடன். இதன் மூலம் உழைப்பு குறைந்து வருமானம் குறைந்து நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும் என்றார். இந்த சீர்கேட்டிற்கு திமுக அரசு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகுவது தான் தர்மம் என்றார்.



தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த செம்மலை, இரட்டை இலை சின்னமும், அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தான் என்பதையும் கீழமை நீதிமன்ற முதல் உச்ச நீதிமன்ற வரை அனைத்து நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளது என்றார். இதில் எந்த ஆளு கட்சியும், எந்த தேசிய கட்சியின் அழுத்தத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மசிய மாட்டார், பணிய மாட்டார். எந்த நேரத்தில் தேர்தல் அறிவித்தாலும் அதிமுக அதனை சந்திக்க தயாராக உள்ளது என்று கூறிய செம்மலை, அதிமுக கூட்டணி அமைத்தும் தனித்தும் போட்டியிட்டு வெற்றி பெற்ற இயக்கம். இந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பெறக்கூடிய வாக்குகள் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான அச்சாரமாக இருந்து அதிமுக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார். மேலும் அதிமுகவுடன் கூட்டணி சேருபவர்களுக்கு தான் நன்மை கிடைக்கும் அதிமுகவிற்கு கூட்டணி சேர்ந்தாலும் சேராவிட்டாலும் தனித்தன்மை கொண்ட ஒரு மாபெரும் இயக்கம்" என்றார்.