சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா தளமான ஏற்காட்டில் நாள்தோறும் இரவு நேரங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கன மழையால் சேலம் - ஏற்காடு மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு, 60 அடி பாலம், 80 அடி பாலம் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. சாலை மற்றும் தடுப்பு சுவர் மீது ராட்சத பாறைகள் மற்றும் கற்கள் சரிந்து கீழ் சாலையில் விழுந்த காரணத்தால் வாகன போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. மண்சரிவு குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.



நேற்று மாலையும் தொடர்ந்து மிதமான மழை பெய்த போதிலும் இரவு முழுவதும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே மண் சரிவு ஏற்பட்ட பகுதியை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சாலைகள் விழுந்திருந்த மரங்களை பொதுப்பணி துறையினருடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அகற்றினார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் இவற்றிலிருந்து பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் சரிவு ஏற்படலாம் என்பதற்காக அடிவாரத்தில் உள்ள காவல் துறையின் சோதனை சாவடியிலேயே வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. 


கடந்த ஆண்டு இதேபோன்று ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகள் இதுவரை சீர்படுத்தாமல் சேலம் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் கொண்டு வந்தது. இது குறித்து கடந்த வாரம் ஏபிபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று பதிவிற்கான மழையால் கடந்தாண்டு மண் சரிவு ஏற்பட்ட அதே இடங்களில் மீண்டும் பத்திருக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. 



நேற்று இரவு ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகள் அடிவாரத்தில் தடுத்த நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். சாலையை சீர்படுத்த ஓரிரு நாட்கள் ஆகும் என்பதால் ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் குப்பனூர் - ஏற்காடு சாலையை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மழை தொடர்வதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏற்காடு மலை பாதையில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.


நேற்று இரவு சேலம் மாவட்டத்தில் 146.2 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 58 மி.மீ மழை பெய்தது. அதிகபட்சமாக வீரகனூரில் 20.00 மி.மீ மழை பதிவானது. கங்கவல்லியில் 20 மி.மீ மழையும், சேலத்தில் 11.7 மி.மீ, காரிய கோவில் 17 மி.மீ, காடையாம்பட்டி 5 மி.மீ, சங்ககிரி  2.1 மி.மீ, ஓமலூர் 11 மி.மீ, எடப்பாடி 1.4 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.