சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள பச்சையப்பன் காலனி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா (50). இவருக்கு பிரகாஷ் (25) நித்யா (32) என ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் நித்தியாவிற்கும் தேவன்னக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் நித்தியா- பிரகாஷ் தம்பதியினருக்கு 12 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் மஞ்சுளாவின் கணவர் இறந்துவிட்டதால், மஞ்சுளா தனது மகன் பிரகாசுடன் தனியாக பச்சையப்பன் காலனி பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து வந்த நித்தியா. தனது மகளுடன் தனது தாயார் மஞ்சுளா மற்றும் சகோதரர் பிரகாஷ் ஆகியோருடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நித்தியாவிற்கும் ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அவரை நித்யா திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 



இதனை தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் கொரோனா பாதிப்பால் செல்வம் இறந்துவிட்ட நிலையில் மீண்டும் நித்யா தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இச்சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன் நித்தியா மீண்டும் திடீரென காணாமல் போனதை அடுத்து அவர்களின் தாயார் மஞ்சுளா மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார். போதிய வருமானம் இன்றி தவித்து வந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட தொடர் மனக்கசப்புகளால் மனம் உடைந்து காணப்பட்ட மஞ்சுளா வீட்டில் உணவு சமைத்து அதில் விவசாய பயன்பாட்டிற்கான பூச்சிக்கொல்லி மருந்தினை கலந்து தான் உண்ட நிலையில், தனது மகன் பிரகாஷ் மற்றும் பேத்திக்கு ஆகியோருக்கு கலந்து கொடுத்துள்ளார்.



இதனால் அவர்கள் மூவரும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சுயநினைவு இழந்து கிடந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின் அவர்கள் தொடர்ந்து எடப்பாடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடும்பப் பிரச்சனையால் மனம் உடைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து எடப்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)