சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலுக்குள் பட்டியலின சமூகத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் இளைஞர் மது போதையில் நுழைந்தாக திருமலைகிரி தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பவர் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஆபாச வார்த்தைகளால் திட்டி அந்த வாலிபரை அடிக்க முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் திமுக தலைமை கழகம் சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் டி. மாணிக்கம் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவபெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 



இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர் பிரவீன்குமார் சேலம் இரும்பாலை காவல் நிலையத்தில் தகாத வார்த்தைகள் திட்டிய மாணிக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இதனிடையே மாணிக்கத்தை விசாரிக்க காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை மற்றும் திருமலைகிரி கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மாணிக்கம் மீது கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூறி, சேலம் இரும்பாலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்நிலைய முன்பாக அமர்ந்து கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சிலர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இதையடுத்து மாணிக்கத்தின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டல், ஆபாசவார்த்தைகள் திட்டுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் நடவடிக்கை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை மற்றும் கிராம மக்கள் கூறுகையில், நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்ல விடமாட்டோம், உயிர் சேதம் ஏற்படும் என்று கிராம மக்கள் ஒன்று திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இது குறித்து பிரவீனின் தந்தை செந்தில் குமார் கூறுகையில், தனது மகனை காணவில்லை யாரோ கடத்தி சென்றுவிட்டார்கள் என்று நான் புகார் அளிக்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். எங்கள் கிராமத்திற்கு அனைத்து உதவிகளும் செய்துவரும் நிலையில் எங்களை எப்பொழுதுமே உரிமையாக திட்டுவார், இந்த நிலை அந்த வாலிபர் மதுபோதையில் உள்ளே சென்று பிரச்சனை செய்ததால் எங்கள் மீது உள்ள உரிமையில் எங்கள் குடும்பத்தினர் போன்று கண்டிப்புடன் சில வார்த்தைகளை திட்டினார். மேலும் சிலர் அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டினர். வேண்டுமென்றே திட்டமிட்டு அவர் மீது அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக வீடியோவை வெளியிட்டுள்ளனர். எங்கள் ஊருக்கு அவர் கடவுள் போல் இருந்து வருகிறார் அனைவருக்கும் உதவியாக இருந்து வருகிறார் என்று கூறினார்.


தொடர்ந்து கிராம மக்கள் இரும்பாலை காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு வருவதால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கிடையே கைது செய்யப்பட்ட மாணிக்கம் காவல்துறையினரின் பாதுகாப்புடன் நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.