சேலம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (08.11.2021) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.



வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. நேற்று இரவு முதல் திடீரென கனமழை பெய்து வருகிறது. இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று (08.11.2021) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையம் 3.8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. ஆத்தூர் 2.2 செ.மீ, கெங்கவல்லி 2 செ.மீ.,  ஏற்காடு பகுதியில் 1.26 செ.மீ, சேலம் மாநகராட்சி பகுதியில் 0.2 செ.மீ, மேட்டூர் 0.12 செ.மீ, எடப்பாடியில் 0.1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மொத்தமாக சேலம் மாவட்டத்தில் 15.72 செ. மீ மழை பெய்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து நீர் நிலைகளிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல நாட்களுக்குப் பிறகு திருமணிமுத்தாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. செங்கல் அணை பகுதிகளில் சாலைகளில் மழைநீர் ஓடுகிறது. தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள கிச்சிப்பாளையம், நாராயண நகர், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, ஐந்து ரோடு, நான்கு ரோடு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை சேலம் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மழை நீரை வெளியேற்றி வருகின்றனர். 


கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் குப்பனூர் - ஏற்காடு சாலையில் மண் சரிவு ஏற்பட்டு சாலைகளில் பாறைகள் விழுந்தது. இதற்கு காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. கனமழையால் டி. பெருமாபாளையம் பகுதியில் உள்ள காரைக்காடு ஏரி நிரம்பி அதன் கரை உடைந்ததில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்தது. இதில் 2 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன. மேலும் 10 க்கும் மேற்பட்ட வீடுகள் மிகவும் சேதமடைந்து, அரிசி, பருப்பு, உடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கன மழை காரணமாக மேட்டூர் அணை மிக வேகமாக நிரம்பி வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 117.610 கன அடியாக அதிகரித்துள்ளது.