சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தினமும் 30க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பிரசவத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். எடை குறைவாக பிறத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுடன் வரும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த மாதம் 20 ஆம் தேதி நடந்த பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தது. அப்பொழுது குழந்தைகளுக்கு எடை குறைவாக இருப்பதால் குழந்தைகள் நல மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் குழந்தைகளை பராமரிக்க இயலாத சூழ்நிலையில் நீங்களே பராமரித்துக் கொள்ளுங்கள் எங்களுக்கு குழந்தைகள் வேண்டாம் என மருத்துவமனையிடம் பெற்றோர் தெரிவித்தனர். 



அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் பெற்றோரிடம் பேசி உள்ளனர். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக எங்களுக்கு மூன்று குழந்தைகளை வளர்க்க முடியாது என பெற்றோர் தெளிவாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவர்கள் மூன்று பெண் குழந்தையும் கடந்த 15 நாட்களாக பராமரித்து வந்தனர். மூன்று குழந்தைகளுக்கும் ஒரே அளவு எடை அதிகரித்த பிறகு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.



அதன்படி ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பெண் குழந்தைகளையும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் முன்னிலையில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி இடம் ஒப்படைக்கப்பட்டது. ஒப்படைக்கப்பட்ட மூன்று பெண் குழந்தைகளையும் 60 நாட்கள் பராமரித்து வருவார்கள். அதே நேரத்தில் பெற்றோர் மனது மாறி மீண்டும் திரும்பி வந்தால் குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைக்கப்படும். ஆனால் அப்போது பெற்றோர் மனது மாறி வராதபட்சத்தில் மூன்று குழந்தைகளையும் தத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.