Just In





சேலத்தில் அதிர்ச்சி... உடல் முழுவதும் பரவிய ரேபிஸ்.... நாய் கடித்து 9 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்
ரேபிஸ் வைரஸ் பரவி உடல் நலம் பாதிக்கப்பட்டதும் காலதாமதமாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வாகனத்தில் செல்லும் போது தெரு நாய்கள் பின் தொடர்வது, சிறுவர்களை துரத்திச் சென்று கடிப்பது போன்ற காரியங்களில் தெரு நாய்கள் ஈடுபடுகின்றன. இதனை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்திலும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் வீராணம் இளங்கோ நகர் பகுதியில் சேர்ந்தவர் முனுசாமி. கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மகன் கிஷோர் ஒன்பது வயது, அங்குள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை ரேபிஸ் வைரசால் பாதிக்கப்பட்டு வலசையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். சிறுவனை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவரை நாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் முழுவதும் பாதிக்கப்பட்டதும் அவரது நடவடிக்கைகள் நாயைப் போல மாறி இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த சிறுவனை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு மருத்துவர்கள் தீவர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சுகாதாரத் துறையினர் சிறுவன் உடலை பெற்று உரிய முறையில் அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் சிறுவனின் பெற்றோரிடம் விசாரித்தனர். அதில் சிறுவனின் வீட்டு அருகே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது ஒரு நாய் அவரை கடித்துள்ளது. ஆனால் சிறுவன் அதை தனது பெற்றோரிடம் கூறாமல் இருந்துள்ளார். இதனால் ரேபிஸ் வைரஸ் பரவி உடல் நலம் பாதிக்கப்பட்டதும் காலதாமதமாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. நாய் கடித்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து ஊறிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாநகரப் பகுதியில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாமன்ற கூட்டத்திலும் மாதம் தோறும் தெரு நாய் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.