தீபாவளி பண்டிகை வருகின்ற 12ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனிடையே தமிழ்நாடு முழுவதும் பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் முழுவதும் 900க்கும் மேற்பட்ட தற்காலிக பட்டாசு கடை வைக்க உரிமம் கேட்டு உரிமையாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். சேலம் மாநகர் பகுதிகளில் திறந்தவெளியில் அனைத்து பட்டாசு கடைகளிலும் ஒரே இடத்தில் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதன்படி சேலம் மாநகர பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடல், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திடல் மற்றும் சேலம் உருக்கு ஆலை அருகே என மூன்று இடங்கள் மாநகராட்சி சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சேலம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள மாநகரப் பகுதியில் உள்ள மூன்று இடங்களில் தற்காலிக பட்டாசு கடை அமைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகத்திற்கு முன்பணமாக ஒரு லட்சம் வரை கொடுக்க வேண்டும். கடை அமைப்பதற்கான கூடாரங்கள் மற்றும் மின்சார இணைப்பினை உரிமையாளர்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று தற்காலிக பட்டாசு கடை வியாபாரிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து சேலம் மாவட்ட தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்கள் கூறுகையில்,  “ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக பட்டாசு கடை நடத்தி வருகிறோம். இன்னும் ஐந்து நாட்களில் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் இதுவரை தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்படவில்லை. குறைந்தது பத்து நாட்களாவது கடை நடத்தினால் மட்டுமே போதிய வியாபாரம் நடைபெறும். ஆனால் இன்னும் ஐந்து நாட்கள் கூட இல்லாத நிலையில் இதுவரை பட்டாசு கடை அமைப்பதற்கான எந்த வித அறிவிப்பையும் சேலம் மாவட்ட நிர்வாகம் வழங்கப்படவில்லை. மூன்று மாதத்திற்கு முன்பு தற்காலிக பட்டாசு கடைகளுக்கு மாநகர காவல் ஆணையாளர் அறிவுப்பினை வெளியிட்டிருந்தார். அதில் தங்களது தற்காலிக பட்டாசு கடை அமைக்க உள்ள இடம் குறிப்பிடப்பட்டு அனுமதி கூற வேண்டும் என்று கூறியதால், பட்டாசு ஆர்டர் செய்து வாங்கிவிட்டதால் கடை வாடகை உட்பட அனைத்து பணிகளும் செய்துவிட்டோம், விதிமுறைகளை பின்பற்றியும் உரிமை கிடைக்காமல் கடை அமைக்க முடியாமல் உள்ளதால் அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



மேலும், சேலம் மாநகர பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளை ஒரே இடத்தில் வைப்பதற்கான மாவட்ட நிர்வாகம் பேசி வருகிறது. ஆனால் லட்சக்கணக்கில் பணத்தை இதற்காக முதலீடு செய்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் கூறுவது போல ஒரே இடத்தில் கடைகளை அமைத்தால் வியாபாரம் பெரிதளவில் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி ஒரே இடத்தில் பட்டாசுகளை வைப்பதினால் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும். பருவமளையும் தொடங்க உள்ளதால் பட்டாசுகளை பாதுகாப்பதற்கு ஊதிய வசதிகள் இல்லாமல் போய்விடும். எனவே தாங்கள் விண்ணப்பத்தில் கொடுத்துள்ள எங்களது கடைகளுக்கு இந்த ஆண்டு சேலம் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும், அடுத்த ஆண்டு முதல் அறிவிப்பு கொடுக்கும்போது ஒரே இடத்தில் கடை அமைத்துக் கொள்ள அனுமதி கொடுத்தால் அதற்கு ஏற்றவாறு தயாராகிக் கொள்வோம் என தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டனர்.