Salem Leopard: சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை - பொதுமக்கள் அச்சம்

ஓமலூர் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை பட்டியில் அடைத்து வைத்திருந்த 5 ஆடுகளை கடித்த கொன்றது. ஒரு ஆட்டை இழுத்து சென்று வயல் பகுதியில் சாப்பிட்டு சென்றுள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Continues below advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி, மூக்கனூர், பூசாரிப்பட்டி, சக்கரைச் செட்டிபட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் கடந்த ஓராண்டாக சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது. இந்த சிறுத்தை வனப்பகுதியில் உள்ள மயில், குரங்கு உள்ளிட்ட விலங்குகளை அடித்து சாப்பிட்டு வாழ்ந்து வருகிறது. ஒரு சில சமயங்களில் மலையை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் புகுந்து ஆடு, மாடு, நாய்களையும் அடித்துக் கொன்று சாப்பிடுகிறது. கடந்த மாதம் காருவள்ளி பகுதியில், ஒரு நாய் மற்றும் மாட்டை அடித்து சாப்பிட்டது. 

Continues below advertisement

சிறுத்தையைப் பிடிக்க தனிப்படை:

அங்கு சுற்றித் திரியும் சிறுத்தையை பிடிக்க சத்தியமங்கலத்தில் இருந்து தனிப்படை வந்தது. வனப்பகுதியில் கேமராக்கள் பொருத்தியும் கூண்டு வைத்தும் சிறுத்தையை பிடிக்க தனிப்படை நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், வனத்துறை வைத்த கேமராவில் மிகப்பெரிய சிறுத்தை ஒன்று அடித்துக் கொன்று சாப்பிடும் காட்சி பதிவாகி இருந்தது. ஆனால், சிறுத்தையை தனிப்படையால் பிடிக்க முடியாத நிலையில் அவர்கள் திரும்பி சென்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கஞ்சநாயக்கன்பட்டி கிராமம் மலைக்கோயில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறிய கிராம மக்கள், அதன் கால் தடயங்களை பதிவு செய்து வனத்துறையிடம் புகார் அளித்தனர். 

மாடுகளை வேட்டையாடிய சிறுத்தை: 

இந்த நிலையில், ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள தூம்பிபாடி ஊராட்சி திண்ணப்பட்டி மாமரத்தூர் பகுதியில் விவசாயி கார்த்திக் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் தனது 5 ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்ட பிறகும் நேற்று மாலை பட்டியில் அடைத்து வைத்திருந்தார். இன்று காலை பட்டியை சுத்தம் செய்வதற்காக சென்றபோது, 2 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதும், 3 ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் வயல் பகுதியில் ஒரு ஆட்டை இழுத்துச் சென்று பாதி ஆடு கோரமாக கிடந்தது. கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்து வந்த நிலையில், தற்போது அங்கு வந்த சிறுத்தை பட்டியில் கட்டி வைத்திருந்த ஆடுகளை கடித்து கொன்றுள்ளதாக கிராம மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். மேலும், ஆட்டை கடித்த சிறுத்தை, ஒரு ஆட்டை வயல் பகுதிக்கு இழுத்துச் சென்று முழுமையாக சாப்பிட்டு சென்றுள்ளது. 

ஆடுகளை வேட்டையாடியது சிறுத்தையா?

இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கும் கால்நடை மருத்துவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது இந்த ஆடுகளை சிறுத்தை அடித்திருக்க வாய்ப்பில்லை என்றும் நாய்கள் கடித்து இருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காருவள்ளி பகுதியில் பதுங்கியுள்ள சிறுத்தை நடமாட்டம் குறித்து ராமசாமி மலை பகுதியில், வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். 

மேலும், காமலாபுரம் பகுதி அரசு கால்நடை மருத்துவர் கோபி, சம்பவ இடத்திற்கு சென்று இறந்த ஆடுகளை ஆய்வு செய்து வருகிறார். மேலும், சிறுத்தை கடித்து உயிருடன் உள்ள ஆடுகளை காப்பாற்ற முடியாத அளவிற்கு கடித்து சேதப்படுத்தி இருப்பதாக தெரிவித்த மருத்துவர் கோபி, அந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடுகள் கடித்திருப்பதை பார்க்கும்போது சிறுத்தை கடித்திருப்பதை போன்ற சூழல் இருப்பதாக தெரிவித்தனர்.  

பொதுமக்கள் கோரிக்கை:

இதனால், அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே சர்க்கரை செட்டிப்பட்டி பகுதியில் கடந்த மாதம் பத்து ஆடுகளை மர்ம விலங்கு அடித்து கொன்றது. தொடர்ந்து இந்த பகுதியில் ஆடு, மாடு, நாய்களை அடித்து சாப்பிட்டு வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாகவும், சிறுத்தை இல்லாவிட்டாலும், ஆடுகளை கடித்த மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola