சேலத்தில் பிரசித்திபெற்ற திருக்கோவில்களில் ஆமை வேகத்தில் நடந்து வரும் ஆலயத் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த கோரி அகில பாரத இந்து மகா சபாவினர் சிவன் வேடமணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.


சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோயில், கோட்டை மாரியம்மன் திருக்கோவில், குகை மாரியம்மன் கோயில் மற்றும் கரபுரநாதர் கோயில் ஆகியவற்றில் நீண்ட நாட்களாக ஆலய திருப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் இந்தக் கோயில்களில் நீண்ட வருடங்களாக கும்பாபிஷேக விழாவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் மிகவும் ஆமை வேகத்தில் நடந்து வரும் திருப்பணிகளை விரைந்து முடித்து, விரைவில் கும்பாபிஷேக விழா நடத்த வேண்டும் என வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபாவினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். 



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அகில பாரத இந்து மகா சபாவினர், சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் திருக்கோயில், கோட்டை மாரியம்மன் திருக்கோவில், குகை மாரியம்மன் கோயில் மற்றும் கரபுரநாதர் கோயில் ஆகியவற்றில் நீண்ட நாட்களாக ஆலய திருப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் இந்தக் கோயில்களில் நீண்ட வருடங்களாக கும்பாபிஷேக விழாவும் நடைபெறவில்லை எனவே முதல்வர் அதனை உடனடியாக நடவடிக்கை எடுத்த முடித்துத் தரவேண்டும் என்றும், மேலும் கொரோனா பேரிடர் காலம் என்பதால் இரண்டு ஆண்டுகளாக சேலம் மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் விழாக்கள் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் அதற்கும் அனுமதிக்க வேண்டும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களுக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறினர். 



சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் மற்றும் சுகவனேஸ்வரர் திருக்கோவில் கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது, தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு , கடந்த முறை சேலம் வந்த போது கோட்டை மாரியம்மன் திருக்கோவில் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்து விரைவில் கட்டுமான பணிகளை முடிக்குமாறு கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர்கள் சிவன் வேடம் அணிந்து கோஷங்களை எழுப்பி பேரணியாக வந்ததால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களில் நான்கு பேரை மட்டுமே ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல அனுமதித்தனர்.