சேலத்தில் இயங்கி வரும் பிரபல ஜவுளி நிறுவனத்தில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் நான்கு மணி நேரத்தை கடந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


கரூர் மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் (சிவா டெக்ஸ்டைல்ஸ்) என்ற தனியார் ஜவுளி நிறுவனத்தின் கரூர் நகரம், குளித்தலை, சேலம், திருப்பூர், ஊட்டி உள்ளிட்ட ஐந்து கிளைகள் மற்றும் வீடு மற்றும் அலுவலகங்கள் என ஏழு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.



இதன் ஒருபகுதியாக சேலம் மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள ஜவுளி கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கியுள்ளனர். காலை 10 மணிக்கு துவங்கிய சோதனை நான்கு மணிநேரத்தை கடந்து நடைபெற்று வருகிறது. நான்கு கார்கள் மூலமாக வந்த 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுவாக பிரிந்து சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு தலங்களாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர். முறையாக வருமானவரி கட்டப்பட்டுள்ளதா? ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் இந்த சோதனையில் அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கடந்த தீபாவளி பண்டிகை காலங்களில் அதிகளவில் விற்பனை நடைபெற்றது. இந்த நிலையில் இந்த வருமானவரி சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.