நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் முழுவதும் சவர்மா உணவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள உணவு கடைகளில் தரமான உணவுகள் தயாரிக்கப்படுகிறதா என்றும், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் காலாவதியான உணவுகளை அளிப்பதற்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி சேலம் மாவட்டம் உள்ள ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், தலைவாசல், சேலம் மாநகர பகுதிகளில் உள்ள ஏவிஆர் ரவுண்டானா, சீலநாயக்கன்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் இரண்டாவது நாளாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், பழைய மற்றும் சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சிக்கன் - 200 கிலோ, ப்ரைடு சாதம் - 21 கிலோ, செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட சிக்கன் பிரியாணி - 10 கிலோ, மயோனைஸ் - 5.3 கிலோ, செயற்கை நிறமூட்டிகள் - 800 கிராம், தயார் செய்யப்பட்ட மசாலா - 8 கிலோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் - 4 கிலோ என மொத்தமாக 249.100 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டது. இதில் 15 ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 3 ஹோட்டல்களுக்கு தலா ரூ. 6000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



நேற்று சேலம் மாநகர சாரதா கல்லூரி சாலை, புதிய பேருந்து நிலையம், அழகாபுரம், பேர்லாண்ட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் உணவகங்களில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கதிரவன் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் தலைமையில் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது தரமற்ற முறையில் இருந்த சவர்மா மற்றும் சிக்கன், மட்டன் உள்ளிட்ட 182 கிலோ இடையிலான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தரமற்ற உணவுகள் விற்பனை கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.


சேலம் மாநகரப் பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 30க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் சேலம் மாநகரப் பகுதியில் உள்ள இருவதற்கும் மேற்பட்ட பிரபலமான கடைகளில் பழைய மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 182 கிலோ சிக்கன் மற்றும் மட்டன், 17 கிலோ சமைத்து வைக்கப்பட்டிருந்த அரிசி சாப்பாடு, 18 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், 500 கிராம் மயோனிஸ், 300 கிராம் உணவு நிறைவூட்டி, 2 கிலோ ஷவர்மா, சிக்கன் உள்ளிட்டவைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை உடனடியாக அளித்தனர். மேலும் 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தரமற்ற உணவுகள் வைத்திருந்ததற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன்,  “சேலம் மாவட்டத்தில் சவர்மாவிற்கு தடை என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. உணவகங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் வைத்திருப்பது மற்றும் தரம் மற்ற உணவுகளை தயாரிக்கிறார்களா என ஆய்வு செய்து வருகின்றோம். ஷவர்மா என்பது மாலை நேரங்களில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவு. எனவே இரவு வரை இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெற உள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி இரண்டு வகையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒன்று உடனடியாக அபராதம் விதிப்பது மற்றொன்று உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இந்த இரண்டு நடவடிக்கைகளும் தரமற்ற உணவுகள் தயாரிப்பவர்கள் மீது எடுக்கப்படும். ஷவர்மா தயாரிக்கும் உணவுகங்களில் வாடிக்கையாளர்கள் அதிகம் வருவதால் முறையான வகையில் சமைக்காத ஷவர்மாக்களை வழங்குவதால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. ஒருமுறை ஷவர்மா மிஷினில் இருந்து வெட்டி எடுத்துவிட்டால் அதன் உள்பகுதியால் உள்ள சிக்கன் 25 நிமிடங்களுக்கு மேலாக நெருப்பில் வேக வேண்டும். ஆனால் உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ஷவர்மா தயாரித்துக் கொடுப்பதால் சிக்கனில் உள்ள கிருமிகள் பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்று கூறினார்.