தருமபுரி அருகே உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் கட்டிட வசதி இல்லாமல் செடிகள் முளைத்து கட்டிடங்கள் விரிசலான நிலையில், கான்கிரீட் பெயர்ந்து விழுந்து வரும் கட்டிடங்களில் அமர்ந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். கழிவறை மற்றும் குடிநீர் வசதி இல்லாமல், முட்புதர்களுக்கு சென்று அரசு பள்ளி மாணவர்கள் அவதிப்படும் நிலையில் இருக்கின்றனர்.

 

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாலச்சங்கமணஹள்ளி கிராமத்தில் கடந்த 1967 ஆம் ஆண்டு அரசு தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த பள்ளி உயர்நிலை தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்காலிகமாக அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு தொடக்கப்பள்ளியில் 80 மாணவ, மாணவிகளும், உயர்நிலைப் பள்ளியில் 124 மாணவ மாணவிகளும், பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள் என 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு சுற்றுவட்டாரத்தில் கிராம பகுதிகள் அதிகம் என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. ஆனால் இன்று வரை அவற்றுக்கான கட்டிடங்கள் கட்டித் தரவில்லை. போதுமான இடவசதி இல்லாததால் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் உயர்நிலை பள்ளிக்கு, கூடுதல் கட்டிடங்களோ, கழிவறை, குடிநீர் வசதி செய்து தரவில்லை.



 

போதிய கட்டிடங்கள் இல்லாததால் வகுப்பறைகள் பற்றாக்குறை, இட பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுமார் 5 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மற்ற உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்கின்றனர். இதனால் சேர்க்கை விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் இப்பள்ளியில் உள்ள கட்டிடங்கள் சுமார் 50 ஆண்டுகள் பழைய கட்டிடங்கள் என்பதால் அதில் இருந்து கான்கிரீட் மேல் தளங்கள் தினம் தினம் இடிந்து விழுந்து வருகின்றது. மேலும் கட்டிடத்தின் மேல் அரசமரம், ஆலமரம், உச்சி மர செடிகள் முளைத்து வளருவதால், கட்டிடங்கள் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் அச்சத்துடனே தினம்தோறும் பள்ளிக்கு வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் கட்டிடங்களில் இருந்து மழை நீர் கசிந்து வருவதால் மாணவ, மாணவிகளின் புத்தகங்கள் மற்றும் மாணவர்கள் நனைந்து விடுகின்றனர்.



 

மேலும் பள்ளி வளாகத்திலேயே மழைநீர் வெளியேற முடியாமல் தேங்குவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கழிவறை வசதியில்லை என்பது தான் மிகவும் வேதனைக்கு உள்ளான விஷயம். இதனால் மாணவர்களுக்கான கழிவறைகள் கட்டப்பட்டிருந்தாலும், தண்ணீர் வசதி இல்லாததால் பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு பராமரிக்கபடாமல் இருக்கின்றது. இதனால் மாணவர்கள் இயற்கை உபாதைகளுக்காக அருகில் உள்ள ஏரிகள், முட்புதர்கள் மற்றும் மறைவான இடங்களுக்கு சாலையை தாண்டி செல்ல வேண்டிய அவல நிலை தான் தினம் தோறும் நடந்தேறி வருகிறது.

 

மேலும் பெண் ஆசிரியர்கள் மற்றும் பெண் பிள்ளைகள் இருப்பதால் ஒரே ஒரு கழிவறையை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பெண்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெண் பிள்ளைகளுக்கு கழிவறைகள் இல்லாததால், மிகுந்த சிரமம் அடைந்து வருவதன் காரணமாகவே பல பெண்கள் இப்பள்ளியில் சேர்ப்பதை பெற்றோர்கள் தவிர்த்து வருகின்றனர். அவ்வாறு ஓரிரு மாணவிகள் இப்பள்ளியில் சேர்ந்தாலும், கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றால், தங்கள் வீடுகளுக்கு சென்று பயன்படுத்திவிட்டு வர வேண்டிய சூழலும் இப்பள்ளியில் நிலவி வருகிறது. அரசு பள்ளியில் ஆசிரியர்கள் சிறந்த தேர்ச்சி விகிதத்தை கொடுத்தாலும் இது போன்ற இன்னல்களால் பலரும் இப்பகுதியில் உள்ள அரசு பள்ளியை தவிர்த்து வருகின்றனர். மேலும், பாலஜெங்கமனல்லி கிராமத்திலேயே அரசு பள்ளி அமைவதற்கு இடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது கல்வித்துறை அதிகாரிகள் மீது பதிவு செய்யாமல் இருப்பதால், அந்த இடத்தில் இன்று வரை கட்டிடங்கள் கட்டப்படாமல் இருந்து வருகிறது. மேலும் அதே இடத்தில் சிலருக்கு இலவச வீட்டு மனை பட்டாவும், பண்ணை குட்டை ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டிருப்பதால் இதனை பதிவு செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். பள்ளிக்கட்டிடம் வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சர், மாவட்ட ஆட்சியர் என பலரிடமும் மனு கொடுத்து இதுவரையிலும் இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது.



 

கிராமப்புற பள்ளிகளில் திறமையான ஆசிரியர்கள் இருந்தாலும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைக்காமல் இருப்பதாலே பல மாணவர்கள் இடைநிற்றல் மற்றும் உள்ளூரில் உள்ள பள்ளிகளை தவிர்த்து விட்டு தொலைவில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு செல்லும் நிலை தொடர்ந்து வருகிறது. இதனை தமிழக அரசும் பள்ளி கல்வித்துறை கவனத்தில் கொண்டு மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை அந்தந்த பள்ளிகளிலேயே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும் இப்பள்ளியில் தினம் தினம் இடிந்து விழும் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்டி குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் தெரிவிக்கின்றனர்.