ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து எடப்பாடி தனி மாவட்டமாக அறிவிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் திமுக ஆட்சி அமைந்த உடன் அந்த திட்டமானது கைவிடப்பட்டது. தற்போது, மீண்டும் சேலம் மாவட்டத்தை பிரிப்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 3ம் தேதி சட்டப்பேரவையில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் இது குறித்து பேசி உள்ளார். அதில், சென்னைக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டம் 11 தொகுதிகளை கொண்ட பெரிய மாவட்டம் உள்ளது. எனவே நிர்வாக வசதிக்காக சேலம் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். குறிப்பாக, மேட்டூர் தலைமை இடமாகக் கொண்டு ஒரு மாவட்டமும், ஆத்தூரை மையமாக கொண்டு மற்றொரு மாவட்டம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பிளான்:
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த ஊரான எடப்பாடியை தலைமையாகக் கொண்டு சங்ககிரி, ஓமலூர், மேட்டூர், நங்கவள்ளி சட்டமன்றத் தொகுதிகளை ஒன்றிணைத்து எடப்பாடி தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சேலம் மாவட்ட மக்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். முந்தைய ஆட்சிக்காலத்தில் எடப்பாடி சேலத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக பிரித்து அறிவிக்கப்பட்டால், பல்வேறு பொருளாதார பாதிப்புகள் சேலம் மாவட்டத்திற்கு ஏற்படும் நிலை இருந்தது. குறிப்பாக, தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை, சங்ககிரி கோட்டை, சேலம் விமான நிலையம், சேலம் உருக்காலை, பெரியார் பல்கலைக்கழகம், அரசு பொறியியல் கல்லூரி போன்றவை எடப்பாடி மாவட்டத்திற்கு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், வணிகத்தைப் பொருத்தவரை மேட்டூரில் உள்ள தனியார் நிறுவனங்கள், ஓமலூர் பகுதியில் உள்ள கைத்தறி பட்டு நிறுவனங்கள், சங்ககிரியில் உள்ள லாரி உதிரி பாகங்கள், கரும்பு மற்றும் தக்காளி விவசாயம் என பல வணிகம் சார்ந்தவை எடப்பாடி மாவட்டத்திற்கு கொடுக்கப்படும் நிலை இருந்தது.
ஆத்தூர் தனி மாவட்டம்:
ஆனால், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக சேலம் மாவட்டத்தில் இருந்து ஆத்தூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. சேலம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஆத்தூர் மாவட்டத்தில் ஏற்காடு, கெங்கவல்லி, வாழப்பாடி, ராசிபுரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓரிரு தொகுதிகள் சேர்க்கப்படும் நிலை உருவாகும். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காடு, ஆத்தூர் மாவட்டத்தில் சேர்க்கப்படும். விவசாயத்தைப் பொறுத்தவரை மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள் என பல விவசாயத் தொழில்கள் ஆத்தூர் மாவட்டத்தில் இணைக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
மக்கள் கருத்து:
ஆத்தூரை தனி மாவட்டமாக பிரிப்பதில் சேலம் மாவட்டத்திற்கு அதிக அளவு பாதிப்பு இல்லை. இருப்பினும் ஒரு மாவட்டத்திற்கு தேவையான வாக்காளர்கள் ஆத்தூர் மாவட்டத்தில் இல்லை. எனவே சென்னைக்கு அடுத்தபடியாக அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மாவட்டமாக சேலம் சிறந்து விளங்கி வருகிறது. எனவே சேலம் மாவட்டத்தில் இரண்டாக, மூன்றாவது பிரிக்கும் நடவடிக்கையை அரசு கையில் எடுக்கக் கூடாது என சேலம் மாவட்ட பொது மக்கள் கூறுகின்றனர்.
அரசு விளக்கம்:
கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. ஆனால் அரசு தரப்பில் சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் இதுவரை தமிழக அரசிடம் இல்லை என அரசு தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.