தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இன்று காலை 7:00 மணிமுதல் மாலை 7:00 மணிவரை சேலம் மாவட்டத்தை உள்ள 1,235 வாக்குச்சாவடி மையங்கள் உட்பட 1,356 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்கான பணியை மாநகராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது. இன்று ஒரேநாளில் 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 



கொரோனா மூன்றாம் அலை வருவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது இதில் ஒரு பகுதியை இன்று (12.09.2021) சேலம் மாவட்டத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், 1,235 வாக்குச்சாவடி மையங்கள் உட்பட 1,356 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. மக்களுக்கு தடுப்பூசி முகாம் குறித்து எடுத்துரைத்து தடுப்பூசி சீட்டு மக்களுக்கு நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் மற்றும் அரசு அதிகாரிகள் மக்களிடம் நேரடியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 38,33,280 ஆகும். இதில் 18 வயது பூர்த்தி செய்தவர்கள் 29,22,926 பேர் உள்ளனர். இதுவரை நமது மாவட்டத்தை 13,46,378 நபர்கள் முதல் தவணைத் தடுப்பூசியும், 3,93,556 இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். தற்போது நாள் ஒன்றுக்கு ஒரு சதவீதம் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது. இதை மேலும் அதிகரிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (12.09.2021) மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்ற உள்ளது. இதற்காக சேலம் மாவட்டத்தில் நேற்று முதல் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் பூத் ஸ்லிப் போன்று தடுப்பூசி சீட்டு வழங்கப்பட்டது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 1,235 வாக்குச்சாவடி மையங்கள் உட்பட 1,356 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.



முன்னதாக, நேற்று தடுப்பூசி விழிப்புணர்வு வாகனம் மூலம் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி அவசியம் குறித்து விழிப்புணர்வு வாகனம் மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு பூத் ஸ்லிப் போன்று தடுப்பூசி சீட்டு வழங்கப்பட்டு இன்று மெகா தடுப்பூசி முகாமிற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட மக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவேளை கடைபிடித்து மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



சேலம் மாவட்டத்தில் இதுவரை அதிகபட்சமாக ஏற்காடு மலைப்பகுதியில் 60% பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். சேலம் மாநகராட்சி பகுதியில் 55 சதவீதமும், குறைந்த அளவிலான தடுப்பூசி 38 சதவீதம் ஓமலூரிலும் போடப்பட்டுள்ளது.