சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் அருகே உள்ள பூவனூர் பகுதியில் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனது மனைவி வேதவள்ளியுடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளார். சுக்கம்பட்டி அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்திற்கு முன்னாள் சென்ற லாரி வேகத்தடை இருப்பதால் ஓட்டுநர் லாரியின் வேகத்தை குறைத்த போது பின்னால் வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் லாரியின் மீது மோதியது. அப்போது ஆச்சா குட்டப்பட்டியில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து இரண்டு இரு சக்கர வாகனத்திற்கும் பின்னால் மோதியது. இதில் பிரண்டை குழந்தைகள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் வேதவள்ளியின் கணவர் லட்சுமணன் பலத்த காயங்களுடன் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 



மேலும் பேருந்தில் வந்த பத்திற்கும் மேற்பட்டோருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த வீராணம் காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வீராணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சேலம் அரூர் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.