பள்ளி கல்வித் துறைக்கு வரும் நான்கு ஆண்டுகளுக்கு ரூ 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தருமபுரியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்தபோது தெரிவித்தார்.

 

தருமபுரி அரசு மருத்துக் கல்லூரி கலையரங்கில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கல்வி அதிகாரிகளுடனான மண்டல அளவிலான இரண்டாம் கட்ட ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து  கொண்டு, பள்ளிக்கல்வி துறை வளர்ச்சி மற்றும் ஆய்வு குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டம் முடிந்த பிறகு  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அதில், “நான்கு மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் பள்ளிகளுக்கு என்ன தேவை, தன்னிறவு பெருவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த பின்தங்கிய மாவட்டத்தில் கல்வியை எவ்வாறு மேம்படுத்துவது, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பொருட்கள் சரியாக வழங்கப்பட்டுள்ளதா? அதில் இன்னும் எவ்வளவு தேவை அதை விரைவில் எவ்வாறு வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 



 

பெண் குழந்தைகள் கல்வி இடைநிற்றல் அதிகமாக உள்ளது. ஓசூர் அருகே உள்ள தளி பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு நேரில் பார்வையிட்டு வந்தேன். தமிழக முதல்வர் பள்ளிக்கல்வித் துறையில் பல புரட்சிகரமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதில் மிக முக்கியமான ஒரு திட்டம் புதுமைப்பெண் திட்டமாகும். தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித் துறையில் கற்றல் இடைவெளி உள்ள இடங்களில் புதுமைப்பெண் திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவிகளுக்கு உயர் கல்வி படிக்கின்ற மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது என்பது புரட்சிகரமான திட்டமாகும். 

 

அரசு பள்ளிகளில் கழிவறை என்பது மிக முக்கியமானதாகும். நாங்கள் ஆய்வுக்கு செல்லும் பொழுது தலைமை ஆசிரியர் அறைக்கு செல்வதற்கு முன்பாக முதலில் கழிவறைக்கு தான் சென்று ஆய்வு செய்கின்றோம். திடீர் ஆய்வு செய்யும் பொழுது தான் உன்னை நிலவரம் தெரியும். மேலும் பேராசிரியர் அன்பழகனார் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் அனைத்து பள்ளிகளிலும்  கழிவறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். அதில் இந்த ஆண்டுக்கு 1300 கோடி ரூபாய் கொடுக்கப்படும். 18,000 வகுப்பறைகள் கட்டுவது மட்டுமல்ல, கழிவறைகள் எங்கெங்கு தேவைப்படுகிறது. அங்கு அனைத்திலும் கழிவறைகள் கட்டப்படும் சி எஸ் ஆர் ஆக்டிவிட்டி மூலமாக, தொண்டு நிறுவனங்கள் மூலமாக நல்ல பணிகள் செய்ய  ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

 

மேலும் நபார்டு மூலமாக ரூபாய் 750 கோடி பள்ளி கல்வி துறைக்கு டார்கெட். இது மட்டுமல்லாமல் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு 500 கோடி ரூபாய்  பராமரிப்புக்காக 400 கோடி ரூபாய், ஊரக வளர்ச்சி மூலமாக  எல்லாம் சேர்த்து 1300 கோடி ரூபாய் பள்ளிக் கல்வித் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் பள்ளிக்கல்வித்துறைக்கு எவ்வித பிரச்சினையும் இல்லாமல் கொண்டு செல்வது நோக்கமாக உள்ளது. பள்ளிகளில் உள்ள பசுமை படை மூலமாக மரங்கள், செடிகள் வளர்க்கப்பட்டு, அதன் மூலம் பழங்கள், காய்களை சத்துணவில் பயன்படுத்தி கொள்ளலாம். அதேப்போல் உடற்பயிற்சிகளில் பள்ளி குழந்தைகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களின் தனி திறனை வெளிப்படுத்த அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. அதற்கு உண்டான கட்டணத்தையும் விளையாட்டு போட்டிகளுக்கு வெளிநாடுகளுக்குச் செல்கின்ற கட்டணத்தையும் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது எல்லோருக்கும் எல்லாம் என்ற கருத்தாக பள்ளிக் கல்வித் துறை உள்ளது” என்று கூறினார்.