தருமபுரி மாவட்டம் இண்டூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கோபால கண்ணன். தொடர்ந்து விவசாயத்தின் மீதும் தீராத ஆர்வம் கொண்டவரால், பணி காலத்தில் விவசாயப் பணிகளில் ஆர்வம் காட்ட முடியவில்லை. இந்நிலையில் 2005ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின்னர் தீவிர ஆர்வத்துடன் விவசாயம் மேற்கொண்டு வருகிறார். இண்டூர் அருகிலுள்ள இ.கே.புதூர் கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் தென்னை, சப்போட்டா, பப்பாளி, நெல் போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்துள்ளார்.

 



 

தருமபுரி வறட்சி மிகுந்த மாவட்டத்தில் அதிக நீர்வளம் இல்லாத, வறட்சியை தாங்கும் வகையிலும், நவீன சூழலில் சந்தை வாய்ப்புக்கு ஏற்ற வகையிலுமான பயிர் குறித்து இணையதளத்தில் தேடியுள்ளார் அப்போது, டிராகன் பழம் குறித்து அறிந்து, அதனை அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து முதற்கட்டமாக 4 செடிகளை தருவித்து வீட்டிலேயே நட்டு வைத்து பராமரித்துள்ளார். தொடர்ந்து டிராகன் பழ செடிகள் நடவு செய்த 3 ஆண்டுகளுக்கு பிறகே பலன் தரத் தொடங்கியுள்ளது. ஆனாலும், 5 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அதிக பழங்களை கொடுத்துள்ளது. இந்தச் செடிகளுக்கு ஈரப்பதம் மட்டும் இருந்தால் போதும். நோய்த் தாக்குதல் எதுவும் இல்லை என்பதால் பூச்சிக்கொல்லி தெளிப்பும் இல்லை. சில நேரம் செவ்வெறும்புகளாலும், வேர்ப்புழுக்களாலும் செடிகளுக்கு சேதம் ஏற்படும். அதை மட்டும் முறையாக நிர்வகித்து கட்டுப்படுத்த வேண்டும்.

 

ஏப்ரல் தொடங்கி அக்டோபர் வரை இந்த பழங்களுக்கான சீசன். பூ தருணத்தில் செயற்கை மகரந்த சேர்க்கை மேற்கொண்டால் பழங்களின் அளவு பெரிதாகக் கிடைக்கும். ஒரு மொக்கு பூவாகி, காயாகி பழமாக 2 மாதம் தேவைப்படும். இதனை விரிவுப்படுத்த வீட்டிலிருந்து செடிகளை சிறியதாக கட் பண்ணி எடுத்து சுமார் 30 சென்ட் பரப்பில் 100 செடிகளை நடவு செய்துள்ளார். 2015 ஆம் ஆண்டு 4 செடிகளில் தொடங்கிய சாகுபடியை ஆண்டுக்கு ஆண்டு விரிவுபடுத்தி 100 செடிகளாக அதிகரித்துள்ளார். இந்த பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி-3 போன்ற சத்துக்கள் இருப்பதாகவும், ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கும் சிறந்த பலன் தருவதாகவும் மருத்துவ உலகம் கூறுவதால் டிராகன் பழங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலத்தில் விளையும் பழம் ரூ.25 முதல் ரூ.40 வரையிலான விலையில் விற்பனை செய்துள்ளனர். ஆனால் வாங்கிச் செல்லும் வியாபாரிகள்  ரூ.100 வரை கூட விற்பனை செய்கின்றனர். மேலும் கட்டுப்படி ஆகும் விலையில் விற்பனை செய்தால் அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த பழத்தின் நன்மைகள் சென்றடையும் என்பதால் லாப நோக்கத்தை தவிர்த்து குறைந்தபட்ச விலையில் விற்பனை செய்கின்றனர்.

 



 

இதனையறிந்த தருமபுரி மாவட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகள், நேரில் வந்து ஆய்வு செய்துள்ளனர். தொடர்ந்து டிராகன் சாகுபடிக்கென தோட்டக்கலைத் துறையில் உள்ள மானிய திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். எதிர்காலத்தில் 1 ஏக்கர் வரை இந்த பழப் பண்ணையை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளார். மேலும் வறண்ட தருமபுரி மாவட்டத்திற்கு உகந்த பயிர் என்பதால், விவசாயிகள் இதனை முயற்சிக்கலாம். இதில் நல்ல லாபம் கிடைக்கும். எனவே இதனை பற்றிய விவரங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைப்பேன் என ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார்.