தருமபுரி மாவட்டத்தில் வானம் பார்த்த பூமியாக விவசாயத்தை நம்பியே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள விவசாயிகளின் பெரும்பாலானவர்கள் பூக்கள் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சாமந்தி, செண்டு, குண்டு மல்லி, ஊசி மல்லி கனகாம்பரம், அரளி உள்ளிட்ட மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இங்கு சாகுபடி செய்கின்ற பூக்கள் அறுவடை செய்து ஓசூர், பெங்களூர், சென்னை, சேலம், கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தினசரி நடைபெறும் பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.



 

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் பூக்கள் சந்தையில், கடந்த ஒரு வாரமாக பூக்களின் விலை குறைந்து விற்பனையாகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிக விலைக்கு விற்கப்பட்ட பூக்கள், தற்போது குறைந்த விலைக்கு விற்பனையாகிறது. மேலும் வழக்கமாக புரட்டாசி மாதங்களில் வெள்ளிக் கிழமை மற்றும் சனிக் கிழமை நாட்களில் பூக்களின் விலை உயர்ந்து உச்சத்தில் விற்பனையாகும். ஆனால் இந்த ஆண்டு விலை குறைந்து விற்பனை ஆவதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். 



இன்றைய சந்தையில் சன்னமல்லி கிலோ 300 ரூபாயிலிருந்து, 240 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கு விற்பனையான  குண்டுமல்லி கிலோ 300 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 600 லிருந்து 300 ரூபாய் என குறைந்து விற்பனையானது. மேலும் அரளி கிலோ 240 லிருந்து 40 ரூபாய்க்கு, சாமந்தி கிலோ 70 லிருந்து 30 ரூபாய் என குறைந்துள்ளது. தொடர்ந்து சம்பங்கி கிலோ ரூ.50, சென்டுமல்லி கிலோ ரூ.20, பட்டன் ரோஸ் 70 ரூபாய்க்கும், ஒரு கட்டு ரோஜா 60 ரூபாய்க்கும் விற்பனையானது.

 

மேலும் புரட்டாசி மாத விரதமான சனிக் கிழமைகளில், காலை 9 மணிக்கு  பூக்கள் விற்றுத் தீரும் சாமந்திப் பூக்கள், இன்று விற்பனையாகமால் தேக்கமடைந்துள்ளது. மேலும் புரட்டாசி மாத விரதத்தையொட்டி பூக்களின் விலை உயரும் விவசாயிகள் எதிர்ப் பார்த்த நிலையில், பெரும்பாலான கோயில்கள் திறக்கப்படாததால், பூக்களின் விலை கடந்த இரண்டு வாரமாக கடுமையாக சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.