நாட்டில் சமூக ஏற்றத்தாழ்வுகளை களையவும், பெண் அடிமைத்தனத்தை ஒழிக்கவும், சாதிய பாகுபாஞ்டை அழிக்கவும், மூடநம்பிக்கைக்கு எதிராகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. 


பெரியார் சிலைக்கு இபிஎஸ் மரியாதை:


அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செம்மலை, மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



திமுக சார்பில் பெரியார் சிலைக்கு மரியாதை:


இதேபோல் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக மாவட்ட அவைத் தலைவர் சுபாஷ், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பை சேர்ந்தவர்கள் பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். 



பெரியார் முகமூடி பேரணி:


இதேபோன்று, தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் பெரியாரின் முகமூடியை அணிந்து கொண்டு பேரணியில் ஈடுபட்டனர். கோட்டை மைதானத்தில் தொடங்கிய பேரணியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு பெரியாரின் முகமூடியை அணிந்து கொண்டு அவரின் புகழை மிழக்கமிட்டபடி கோட்டை மைதானத்திலிருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



தவெக மரியாதை:


தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 146 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு சேலம் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் தலைமையில் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்துமலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான நிர்வாகிகளுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.



வன்னியரசு மாலை அணிவித்து மரியாதை:


தொடர்ந்து, தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அக்கட்சியின் துணைத் தலைவர் வன்னியரசு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பெரியார் பிறந்த நாள், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. 



பாமக மரியாதை:


பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தந்தை பெரியார் 146 வது பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.