தருமபுரி அடுத்த அன்னசாகரத்தில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு  விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா, கடந்த 12 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி 7 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த நாட்களில், ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டது. இன்று பங்குனி உத்திர தினத்தில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, குடத்தில் கொண்டு வரப்பட்ட பாலால் சுவாமிக்கு ஆபிஷேகம் செய்து வழிப்பட்டனர்.

 



 

இதனையடுத்து பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று  நடைபெற்றது.  விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரினை முதலில் ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து நிலை பெயர்த்தனர். அப்போது பக்தர்கள் முருகனுக்கு அரோகரா அரோகரா  முருகா என எழுப்பிய கோஷங்கள் எழுப்பி, பெண்கள் தேரின் இழுத்து சென்றனர். தேர் ஊர்வலத்தின் போது பக்தர்கள் உப்பு, மிளகு, சில்லரை காசு, பூ, பழம், நிலத்தில் விளைந்த தானியங்கள் ஆகியவற்றை தேர் மீது வீசி வழிப்பட்டனர். 

 

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில்  சிவசுப்பிரமணிய சுவாமி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று மாலை ஆண்கள், பெண்கள் என அனைவரும் இழுக்கும் தேர் திருவிழா நடைபெறும். தேர் திருவெழாவில் பெண்கள் மட்டுமே  வடம்பிடித்து இழுக்கும் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுவது தருமபுரியில் மட்டமே என்பது குறிப்பிடதக்கது. தேர் திருவிழாவையொட்டி அனைத்து பக்தர்களுக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அப்பொழுது பக்தர்களுக்கு குடிநீர்  வசதியும், மாவட்ட காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.