பாலக்கோடு அருகே மின்விளக்கு வயரிலிருந்து மின்சாரம் தாக்கியதில் மக்னா யானை இறந்ததிற்கு காரணமான, விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பணியில் கவனக் குறைவாக இருந்த வனசரகர் உட்பட வனத் துறையினர் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த நல்லாம்பட்டி கிராமத்தில் கடந்த இரு  தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் உணவு தேடி விவசாய நிலத்திற்கு வந்து, நெல் வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்கின் வயரிலிருந்து மின்சாரம் பாய்ந்து, மக்னா யானை (கொம்பு இல்லாத ஆண் யானை) உயிரிழந்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு வனத் துறையினர் பிரேத பரிசோதனை செய்து யானை உடலை அடக்கம் செய்தனர்.



 

இதனை தொடர்ந்து மக்னா யானை உயிரிழப்பு குறித்து பாலக்கோடு வனத் துறையினர் விசாரணை  மேற்கொண்டனர். மேலும் வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதியில், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக வயல்வெளியில் மின்வேலி மற்றும் மின் விளக்கு அமைத்த விவசாயி சீனிவாசனை, மாரண்டஹள்ளி காவல் துறையினர் கைது செய்தனர். 

 

மேலும் வன பகுதியை ஒட்டியுள்ள விவசாய நில பகுதிகளில், விலங்குகளின் பாதுகாப்பை கண்காணிக்கும் பாலக்கோடு வனசரகர் செல்வம், வனவர் கணபதி, வனக்காப்பாளர் கல்யாணசுந்தரம் ஆகிய மூன்று பேரை மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி, தற்காலி பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து யானை உயிரிழந்த சம்பவத்தில், வனத்துறையினர் பணி இடை நீக்கம் செய்தது, வனத்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.