சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த மே மாதம் 20 ஆம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கி, கத்தி, முகமூடி உள்ளிட்ட பொருட்களுடன் வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் சேலம் மாநகரைச் சேர்ந்த நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் என்பதும், நண்பர்களான இருவரும் யூடியூப் பார்த்து, வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து துப்பாக்கி, கத்தி, முகமூடி மற்றும் துப்பாக்கி செய்வதற்கான உபகரணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் இயற்கையை அழிக்கும் விதமாக சேலம் மாவட்டம் ஊத்துமலை அருகில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. அதற்குச் செல்லும் லாரியில் வெடிகுண்டு வைப்பதற்கு திட்டம் திட்டியது தெரியவந்தது.



தொடர்ந்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அவர்கள் எதற்காக துப்பாக்கி தயாரித்தார்கள். அவர்களுக்கும் ஏதேனும் அமைப்புகளுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக, நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர். அதன் பேரில், அவர்கள் இருவரையும் 2 நாள் காவல்துறையினர் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.


இதைத் தொடர்ந்து, ஓமலூர் காவல் நிலையத்தில் வைத்து இருவரிடமும், கடந்த அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி சேலம் மாவட்ட எஸ்பி., கியூ பிரிவு டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் இருவரும் புரட்சியாளர்களாக மாறும் நோக்கத்தில், துப்பாக்கி தயாரித்ததாகவும், சாமானிய மனிதனில் இருந்து நீதிபதிகள் வரை தவறுகள் நடப்பதால், மனித மாண்புகளையும், இயற்கை மற்றும் அனைத்து உயிரினங்களையும் காக்கும் மனநிலையில், இருவரும் ஒன்று சேர்ந்ததாகவும் கூறியுள்ளனர்.


நவீன் சக்ரவர்த்தியின் பள்ளி தோழனான சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த கபிலர் என்ற வாலிபர் துப்பாக்கி தயாரிக்க துணையாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து கபிலரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து 3 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் இவர்கள் என்ஐஏ விசாரணைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர்.



இது தொடர்பாக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், மூன்று பேரும் சதி செய்து தடை செய்யப்பட்ட அமைப்பாளர் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், சந்தனக்கடத்தல் வீரப்பன் ஆகியோர் வழியில், சாமானிய மக்களை காக்கும் நோக்கத்தில் புரட்சியாளர்களாக மாறுவதற்காக துப்பாக்கிகளை தயாரித்ததாக தெரிவித்துள்ளனர். அதற்காக ஒரு அமைப்பை உருவாக்கி, தங்களது கொள்கை பிடிப்பில் உள்ளவர்களை அதில் சேர்த்து, நன்மை செய்யும் அமைப்பாக செயல்படும். குவாரிகள், கிரஷர்கள் மற்றும் டாஸ்மாக் மதுபான கடைகளில் வேலை செய்பவர்களை சட்டவிரோதமாக துப்பாக்கிகள், பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்து மூலம் தாக்கி சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இலங்கை உள்நாட்டு போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இலங்கைத் தமிழ் மக்களாலும் விடுதலைப்புலிகளும் ஆதாரவாளர்களும் அனுசரிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை குறிக்கும், 2022 மே 18 ஆம் தேதி அன்று வேலை நிறுத்தத்தை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த பயங்கரவாத செயல் மக்களிடையே அச்சத்தை பரப்பும் என்றும், விடுதலைப்புலிகள் மாதிரியான அமைப்பு தமிழகத்தில் வெற்றிகரமாக புத்துயிர் பெற்று உயிர்த்தெழுப்பட்டது என்ற வலுவான செய்தியை மக்களுக்கும், அரசுக்கும் அனுப்பும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நம்பினர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.