சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18,000 கன அடியாக சரிந்தது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் நேற்று முன்தினம் 6வது முறையாக நிரம்பியது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளில் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக கடந்த மூன்று நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 6 முறை நிரம்பியது. இதனால் அணையில் 120 அடிக்கு தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18,000 கன அடியாக குறைப்பு. இன்று காலை மேட்டூர் அணை வரும் நீரின் அளவு வினாடிக்கு 23,300 கன அடியிலிருந்து வினாடிக்கு 18,800 கன அடியாக சரிந்தது. நீர்வரத்து சரிந்ததால் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 22,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 18,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000கன அடி வீதம் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்டம் மதகுகள் வழியாக வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று 7 வது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் நீடிக்கிறது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,000 கன அடியாக குறைந்துள்ளது!
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 20,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6மணி நிலவரப்படி வினாடிக்கு 18,000 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க 9 ஆவது நாளாக தடை தொடர்கிறது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பி விட்டன. அணைகளின் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் மொத்தமாக வினாடிக்கு 37 ஆயிரத்து 403 கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.