மேட்டூர் அணை 44வது முறையாக முழு கொள்ளவான 120 அடியை எட்டியதையடுத்து, 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 32,000 கன அடி உபரிநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
மேட்டூர் அணையில் உபரி நீர் வெளியேற்றம்
கேரளா, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகவில் உள்ள அணைகள் நிரம்பியது. கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதையடுத்து காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கடந்த ஒரு வாரகாலமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் 12-ம் தேதி அணையின் நீர்மட்டம் 114.91 அடியாகவும், நீர் இருப்பு 85.58 டிஎம்சியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 6,339 கன அடியாக இருந்தது. அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் உரிய நாளான ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு கடந்த 28-ம் தேதி 92வது முறையாக தண்ணீர் திறக்கப்பட்டது.
44வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை
தொடர்ந்து, அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால் நேற்று மாலை 6 மணி அளவில் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது. மேட்டூர் அணை 44-வது தடவையாக, நீர்மட்டம் 120 அடியை எட்டி சாதனை படைத்தது. இதையடுத்து, எச்சரிக்கை ஒலி எழுப்பட்டு, மேட்டூர் அணையின் உபரி நீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. 16 கண் மதகு வழியாக, விநாடிக்கு 32,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
உபரிநீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர், பூலாம்பட்டி உள்ளிட்ட காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி, வருவாய்துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ம் தேதி அணை 120 அடியாகவும். கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி, ஆகஸ்ட் 12-ம் தேதி, டிசம்பர் 31-ம் தேதி என 3 முறை 120 அடியை எட்டியது. தொடர்ந்து, நடப்பாண்டில் இன்றும் அணை முழு கொள்ளவான 120 அடியை எட்டியது. கடந்த 8 ஆண்டுகளில், 7 முறை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
ஜூன் மாதத்தில் அணை நிரம்புவது அரிதான ஒன்றாகும். ஜூன் மாதத்தில் அணை நிரம்புவது இது 2-வது முறையாகும். அதன்படி, கடந்த 68 ஆண்டுகளுக்கு பிறகு (1957-ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி) நேற்று மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதத்தில் 2-வது முறையாக உபரி நீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து, டெல்டா பாசன விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த 12-ம் தேதி விநாடிக்கு 10,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. பின்னர், படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் முதல் 26,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை முதல் 25,100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு நேற்று மாலை விநாடிக்கு 58,324 கன அடியாகவும், நீர்மட்டம் 120 அடி, நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக இருந்தது. 16 கண் மதகு வழியாக, 32,900 கன அடியும், நீர் மின் நிலையம், 8 கண் மதகு வழியாக 22,500 கன அடி என மொத்தமாக காவிரி ஆற்றில் 58,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.