தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைவது வழக்கமாக இருந்து‌ வருகிறது. கடந்த சில மாதங்களாக பாலக்கோடு பென்னாகரம் ஒகேனக்கல் வனப்பகுதிக்குட்பட்ட மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, இண்டூர், பாலக்கோடு, சோமனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகிறது. வனப்பகுதியை இந்த யானை கூட்டம் வனப்பகுதியை விட்டு கிராமப்புறங்களுக்குள் நுழைந்து விவசாய நிலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேவையை பூர்த்தி செய்து கொண்டு வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. ஆனால் நான்கு, ஐந்து மாதங்களாக ஒற்றை யானை வனப்பகுதிக்கு செல்லாமல் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில் மாவட்ட வனத்துறை மூலம் இந்த ஒற்றை யானையை விரட்டுவதற்கு வேட்டை தடுப்பு வன காவலர்களைக் கொண்டு வனப் பகுதிக்குள் விரட்டி அடிப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் அந்த யானை வனப் பகுதிக்குள் செல்லவில்லை தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திக் கொண்டே வந்தது.

இந்த ஒற்றை யானையை பிடிப்பதற்கு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி விவசாயிகளும், அரசியல் கட்சி அமைப்புகளும்  போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வந்தனர்.



 

தொடர்ந்து வனத் துறையினரிடம் சிக்காமல்,விவசாயிகளுக்கும் வனத் துறையினருக்கும் போக்கு காட்டி வரும் யானையை, விரட்ட கும்கி யானையை கொண்டு வர வனத் துறையினர் திட்டமிட்டனர். இதனை தொடர்ந்து இன்று  கோயமுத்தூர் மாவட்டம் ஆனைமலை வனப் பகுதியில் இருந்து சின்னத்தம்பி என்கின்ற கும்கி யானை, தருமபுரி மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. யானை நடமாட்டம் உள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் தற்போது கும்கி யானை கொண்டு வரப்பட்டுள்ளது. 



 

தொடர்ந்து யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கும்கி யானையை அழைத்துச் சென்று, ஒற்றை யானையை வனப் பகுதிக்குள் விரட்ட பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையிலான வனத் துறையினரும், வேட்டை தடுப்பு காவலர்களும் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். மேலும் 4, 5 மாத காலமாக விவசாய நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை அழித்து, சேதம் செய்து வந்த ஒற்றை காட்டு யானையை வனப் பகுதியில் விரட்டும் பணி தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டி விடுவோம் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் காட்டு யானையை கண்டவுடன் அதனை துன்புறுத்தாமல், வனத் துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும். ஒற்றை யானையை காட்டு பகுதிக்குள் விரட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.