தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் எவ்வுளவு பிரசித்தி பெற்றதோ, அதே போல் வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வடமாவட்டங்களில் எருது விடும் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் எருதுவிடும் விழாக்களுக்கும் அந்த தடை நீடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கிய நிலையில் எருது விடும் விழாவுக்கான தடையும் நீங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த செட்டிமாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தன் (58) கடந்த 2011 ஆம் ஆண்டு காளை ஒன்றை வாங்கி அதற்கு நந்தி தேவா என  பெயர் சூட்டி எருது விடும் விழாவிற்காக காளையை தயார் செய்து வந்துள்ளார். 


கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த எருதுவிடும் விழாக்களில் கலந்து கொண்ட நந்தி தேவா மின்னல் வேகத்தில் மாடு பிடி வீரர்களிடம் சிக்காமல் சென்று முதல் பரிசை தட்டி சென்றுள்ளது. இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மட்டுமல்லாமல் தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் எருதாட்ட போட்டிகளிலும் கலந்து கொண்டு நந்தி தேவா பெரும் வெற்றிகளை குவித்துள்ளது. 



இதனால் நந்தி தேவா கலந்து கொள்ளக் கூடிய எருதாட்ட போட்டிகளில் காளையின் வேகத்தை பார்க்கவே மக்கள் கூட்டம் அலைமோதும். நந்தி தேவா காளையின் ஓட்டம் குதிரையின் வேகத்திற்கு நிகரானது என்பதால் இதுவரை நடந்த எந்த எருதுவிடும் நிகழ்ச்சிகளிலும் நந்திதேவாவை மாடுபிடி வீரர்கள் பிடித்ததில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காளை நந்திதேவாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. காளையின் உரிமையாளர் கோவிந்தன் கால்நடை மருத்துவரை கொண்டு பரிசோதித்ததில், நந்தி தேவாவுக்கு வயிற்றில் கட்டி இருப்பது தெரிய வந்தது. இந்த கட்டியை இங்கு அகற்ற முடியாது என்பதால் காளைக்கு  சிகிச்சை அளிக்க வெளியூர் கொண்டு செல்ல ஏற்பாடு அதன் உரிமையாளர் கோவிந்தன் ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிலையில் காளை நந்தி தேவா திடீரென உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 




நந்திதேவா காளை உயிரிழந்ததை அறிந்த ஊர் பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். இதையடுத்து. ஊருக்குள் செல்லப்பிள்ளையாக வலம் வந்த காளைக்கு மஞ்சள் பூசி, குங்குமமிட்டு, மலர் மாலைகளால் அலங்கரித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நந்தி தேவா காளை உயிரிழந்த சம்பவம் காட்டுத்தீ போல் சுற்றியுள்ள வேலூர், திருவண்ணமலை, தருமபுரி மாவட்டங்களிலும் பரவியதையடுத்து ஏராளமான மாடுபிடி வீரர்கள் நந்திதேவாவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நந்தி தேவாவை மாடுபிடி வீரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களாக பார்த்து வந்த நிலையில் தற்போது அந்த காளை இறந்ததால் காளைக்கு முறையாக மாலைகள் அணித்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக கிராமத்தில் எடுத்து சென்று அதன் பிறகு இறுதி சடங்குகள் நடந்தன. தொடர் வெற்றி வீரனாக திகழ்ந்து வந்த காளை நந்தி தேவா உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி வேலூர், திருவண்ணாமலை மாவட்ட மக்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.